திங்கள், 10 நவம்பர், 2008

புரியாமல் சில.


இதுமட்டும்
இன்னும் எனக்கு புரியாமல்.

குண்டுகளை ஏற்கவும்
குருதியில் நனையவும்
நாங்கள் மட்டும் தான்
இம் மண்ணில் சபிக்கப்பட்டோமா?

எங்கள் நடைபாதைகள் முட்களாகவும்.
சறுக்கி விழுவது குருதிச் சேறாகவும்.
இருக்கைகள்
மண்டையோடுகளாகவும் தான்
இருக்கவேண்டுமா?

எங்கள் சூரிய விடியல்கள்
இன்றும்
காப்பரண்கள் முன் தான்
விடியவேண்டுமா?

இந்த தேசத்திற்கு நாங்களும்
இந்த தேசம் எங்களுக்கும்
எப்போதுமே எதிரானதா?

ஆயுதங்களை ஏந்தவும்
ஆட்சியாளர்களுடன் பேசவும்
எங்களுக்கு ஆசையா?

எங்களுக்கு மரணங்களை மட்டுமே
பிடிக்கும் என்று
உங்களிடம் சொல்லியவர்கள் யார்?

தமிழர் என்று சொல்வதால்

எந்தவொரு தடை முகாமிலும்
எங்களுக்கு
மதிப்புக் கிடைக்காதா?

நாங்கள் காண ஏங்கும் தேசம்
எப்போதுமே மலராதா?

இது மட்டும் புரியாமல்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

விழியோடல்கள்