திங்கள், 10 நவம்பர், 2008

என் ஊரில் 07.07.90 இல்...


என் நெஞ்சுக்குழியில்
நெருப்பெரித்த 07.07.90 இல்...
காடையர்களிடம் இருந்து
காப்புத் தேடிய போது

எனக்கு பாதுகாப்புத் தந்த
என்னூரின்
பரட்டையாய் பரந்து கிடந்த
பற்றைக்காடுகள்.

அம்மா மடிக்குப் பிறகு
என்னை
பாதுகாப்பாக அரவணைத்து
உறங்க வைத்த
அந்த சருகுப்படுக்கை.

முள் கிழித்து
முதுகின் இரத்தக் கசிவுகள்.
கைரேகைக்குப் பின் என்னுடலில்
அதிக கோடுகளை
அப்போது தான் பார்த்தேன்.

அன்று
என்னவரின் பிணம் எரித்த
தீயின் மீதமும்
காடையரின் செருப்புகளின்
கால் மிதித்த மீதமும்

அந்தக் கொடுமைக்கு
சுவடுகளாய் கிடந்தன.

அப்பனைச் சுட்டதற்காகவும்
அம்மாவை அடித்ததற்காகவும்
அண்ணனைப பிடித்ததற்காகவும்
அக்காவையும் சட்டையையும் கிழித்ததற்காகவும்

ஆத்திரப்பட்டு...
அன்று ஆயுதம் தூக்கிப்போய்விட்ட
என் வயதுக்காரர்கள் தான்
எத்தனை பேர்.

அப்போதெல்லாம்
கோழைகளாய்த் தான்
நானும் சிலரும் இருந்துவிட்டோம்.

அவர்களின்
அத்தனை முகங்களும்
நெஞ்சின் பதிவாயும்
கல்லறையின் ஆழத்திலும்.

உண்மையில் நேற்றையதை எண்ணி
என்னூரில்
அம்மாவைப் போலவே
இன்னும் நிறையப்பேர் அழுகிறார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

விழியோடல்கள்