திங்கள், 10 நவம்பர், 2008

படகுப் பயணம்.


முகம் மூடு்ம் உப்புக்காற்றின்
முந்தானை கிழித்து
கடல் நீரின் அலைக்கூந்தலுக்கு
அழகாய் உச்சி பிரிக்கும்
படகில்

சீற் இல்லாத போதும்
பயணச்சீட்டு கொடுக்கும்
நடத்துனருக்கும்
சிலவேளைகளில் சில்லறை மீதிகளை
ரிப்ஸ் ஆக விட்டு

படகுப் பயணம் போவோம்
திருமலை - மூதூர் படகுச்சேவையில்.

ஓடி ஓடி வந்தும்
வரிசையில் ஒழுங்குடன் இடம்பிடித்தும்
இருக்கை இல்லாமல்
இடித்துக்கொண்டும் தொங்கிக்கொண்டும்

வாந்திக்கு மத்தியில்
வயிற்றுக் குமட்டலுடன் வந்துபோனாலும்

பால் சுரக்காத தாய்மடியில்
பால் உறிஞ்சும் குழந்தை போல
சில நாட்கள் படகில்லாமல் பதறுவதுண்டு.

அரச சேவை என்பதாலோ என்னவோ
அதுவும் தராளமாய்
விடுமுறை எடுப்பதுண்டு.
அந்த நாட்களில் தனியார் விசைப்படகில்
வீடு நோக்குவோம்.

புட்டிப்பாலை நேசிக்கும்
நெல்லிவிருட்சக் குழந்தைபோல.

அப்போதும்
ஊர் சேரும் வரையில்
படகினுள்ளே
உப்புச்சத்தியாக்கிரகம் இருப்போம்.
கோரிக்கைகள் ஏதும் இல்லாமல்

அரசசேவகன் மீண்டும்
ஆயத்தமாகும் நாள்வரையில்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

விழியோடல்கள்