வியாழன், 6 நவம்பர், 2008

இனி ஒருபோதும்...


இனி எந்த ஓநாய்களின்
வெறியாட்டத்திற்கும்
இறைச்சியாகத் தயாராக இல்லை.

அதற்கென்ன...
அவைகளின் கோரப்பற்கள்
மிகக் கூரியவையாகவே இருக்கட்டும்.

அவைகளை நறுக்கி
எங்கள் ஆயுதங்களுக்கு
பூண் இடத் துணிந்துவிட்ட பிறகு...

இனி
எந்தச் சிறைகளிலும்
எவருக்கும்
சிரங்குகளில் ஈக்கள் சீழ் கிண்டாது.

போதும்.
இதுவரையும் கைகளை
இறுகக் கட்டிக்கொண்டு
இருக்கச்சொன்னது.

இனி
எந்தத் தமிழனும் இரை கௌவப்பட்டு
புதையல் ஆகவேண்டாம்.

எம்மில் எவரும்
குச்சு மாட்டி ஐஸ் ஆக்கி உறிஞ்ச
இனியும் அனுமதிக்கப்போவதில்லை.

அதனால்
இனி எந்த ஓநாய்களின்
வெறியாட்டத்திற்கும்
நாங்கள்
இறைச்சியாகி இரை தரப்போவதில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

விழியோடல்கள்