சனி, 27 நவம்பர், 2010

இப்படிக்கு, தாய் நிலமின்றிய அண்ணன்.

வீரம் பீறி வெந்தணல் களமாடி
வென்று
வேட்டொன்று மார்பில் தெறிக்க
வீர விதையாகியயென் தம்பி..

தாயகக் கனவுகளோடு சந்தனப்பேழையினனாக
தமிழினமின்று உரிமை வென்றிருக்குமென்று
அங்கொரு தூபியின் அடியில்
தோழரும் நீயுமாய் துயில் கொள்கிறாயா...?

இங்கு
நீறுபூக்க நீயன்று கண்ட வென்ற களங்கள்
நிலை குலைந்து கரி மேடுகளாயிற்று...
தோழரும் நீயுமாய் இளநீர் உண்டு
உடல் உறங்கிப்போன சோலை மரங்கள்
மீண்டும் முன்னரங்கக் காப்பரணில்.

அச்சம் குறையவில்லை..
இனஅடக்குமுறையும் தீரவில்லை.
ஆண்டாண்டாய் போர் செய்தோம்.
அழித்தோம். அழிந்தோம்.
விடுதலை என்பதற்கு
விளக்கம் மட்டும் கிடைக்கவில்லை.

சந்தனப்பேழையுள் நீ
விதைக்கப்பட்டதற்காய்
கல்லறை மேடுகள் தான் மீதமாகும் சான்றுகளா?

தாய் நிலம் மீது நீ 
வீரங்கொண்டெழுந்தோடி
பாதச்சுவடுகள் பதித்ததன் புண்ணியம்
களப்புதர்களுக்கு மட்டுமே கிடைத்ததா சொல்.

வெள்ளி, 26 நவம்பர், 2010

கண்ணனற்றுத் திரிதல்


கோபியர்களிடம் திருடிய சேலைகளைச் சேர்த்துவைத்து
கண்ணர்கள்
திரெளபதைகளைக் காத்தனர்

புதியதொரு குருசேத்திரத்தில்
பீஷ்மர்களும் துரோணர்களும் விதுரர்களுமென
சகுனிகளின் தேர்களை ஓட்டிப் போகின்றனர்.

பாரதர்கள் பகடைகளை எறிந்து
பண்டை நிலங்களை
சகுனிகளிடம் விட்டுப் போயினர்.

துச்சாதனர்கள் பார்த்திருக்க
சகுனிகளிடம் துகில்களைக் களைந்தெறிந்து
கண்ணனற்றுத் திரிகின்றனர்

திரெளபதைகள்.

ஆளற்றுத் தனித்த வெளிகள்

விரும்புகின்றவைகளை கொடுப்பதும்
தருவதையெல்லாம் ஏற்பதும்
மிக கடினமாயுளது எப்போதும்.

ஆயுள் வரை
தாய்நிலத்தில் தாய்மடியில் உறங்குதலின் வரம்
எப்போதும் எல்லோர்க்கும் சித்திப்பதில்லை தான்.

நம்பிக்கைகள் தூர்ந்த புள்ளியில்
வெளிக்கிறது எனது நிலம்.
மலட்டு முலைகளை இழுத்து உறிஞ்சி
சாகின்றனர் சிசுக்கள்.

கொலைக்கள பூமியின்
ஆளற்றுத் தனித்த வெளிகளில்
அலைந்து
மொட்டைச் சுவர்களை  முட்டித் திரும்புகிறது
 எனது காற்று.

யுத்தத்தை வென்றவர்கள்
இப்போது இடுகாடுகளைக் காக்கின்றனர்.
மரணத்தை வென்று
மண்ணைக் களவு கொடுத்தவர்கள்
கண்ணீரில் உயிர்க்கின்றனர்
வெளிகள் முழுவதும்.. 

நேற்றும் கூட பெருமழை பெய்தது..
இன்னும் முளைக்கவில்லை
மண்ணுக்காக  விதைக்கப்பட்ட மனிதர்கள்.

புதன், 17 நவம்பர், 2010

போராளிகளான அப்பாவிகளையும் அடிமைகளான பயங்கரவாதிகளையும் பற்றி பேசுதல்

தேசங்கள் பலதும் தேசங்களாயிராத பொழுதுகளில்..

தேசமாக்குவதற்கும் முடியாத போது
உருவாக்குவதற்குமென
அடிமைகள் எழுவர்.
அடிமைகள் என்பவர் எப்பொழுதும்
அடிப்படையுரிமைகளுமில்லாத
அப்பாவிகள் என்பதே உண்மை.

ஆட்சியாளர்கள் அடக்குமுறையாளர்களாவதும்
அதிகாரமுள்ளவர்கள் ஆக்கிரமிப்பாளர்களாவதும்
அப்பாவிகளை அடிமைப்படுத்துவதும்
அடிமைகள் விடுதலை கேட்பதும் நாளடைவில்
அடிமைகள் போராளிகளாவதும்
போராளிகளான அப்பாவிகள்
பயங்கரவாதிகள் என்றழைக்கப்படுவதும்
பின்பு
பயங்கரவாதிகள் என்றழைக்கப்பட்ட
அப்பாவி அடிமைகள் அழிக்கப்படுவதுமென..

இதற்கு
நீண்ட வரலாறும் உதாரணங்களுமுண்டு
உலகமெங்கும்.

பயங்கரவாதிகள் ஆக்கப்பட்டவர்கள்
அவர்களை ஆக்கியவர்களையும்
அவர்களும் இவர்களுமாக தேடியலைந்து
அவர்களும் இவர்களுமல்லாதவர்களையும்
கொல்வர்.

அப்பாவிகளில் சிலர்
ஆக்கிரமிப்பாளர்களுக்கு அடிமைகளாகி
துரோகிகளென்று முச்சந்தியில் முண்டங்களாக கிடப்பதும்
பயங்கரவாதி என்றானவர்களும் என்றாக்கியவர்களும்
செய்யும் செய்யத பயங்கரங்களால்
அப்பாவிகளின் வாழ்வும் பயங்கரமாவதுண்டு.

இடையிடையில்
அப்பவிகளுள்ளிருக்கும் போராளிகள்
தமக்குள் போரிட்டுக் கொள்வர்.
போராளிகள்  பயங்கரவாதிகளாகவும் ஆக்கிரமிப்பளர்களாகவும் எட்டப்பன்களாகவும் ஆகி..பயங்கரவாதம் செய்வர்.

அக்கிரமிப்பாளர்களாக விரும்பும் போராளிகளை அழிப்பதற்காக
போராளிகள் போரிட்டும்
ஆக்கிரமிப்பாளர்கள் போராளிகளெனும்
பயங்கரவாதிகளைக் கொல்லப் போரிட்டும்
அப்பவிகளைக் கொல்வர்.

அப்பாவிகள் போராளிகளை ஆதரிப்பர்.
போராளிகளில் சிலர்
உண்ணக் கொடுத்த தட்டில் கழிந்து வைத்தது போல
காட்டிக்கொடுப்பர்.

அடிமைகளாயிருந்த அப்பாவிகள்
அடிப்படையுரிமைகளுமில்லாமல் அழிவர்.
நிலமிழந்து..வெளிகளில் அலைந்து..நாடு கடப்பர்.
அகதிகளாவர்..அனாதைகளாவர்..அரை முண்டமாவர்..
அடைக்கப்படுவர்.

கடைசியில்
அப்பாவிகளுடனிருந்த போராளிகளான பயங்கரவாதிகளும்
ஆக்கிரமிப்பாளர்களிடம் அடிமைகளாவர்.
அதிகாரமற்ற ஆட்சியாளர்களாவர்.

அப்பாவிகள் மீண்டும் மீண்டும்
அடிமைகளாகவே வாழ்வர்..
குர்தீஷியர்களைப் போலவும் பலஷ்த்தீனர்களைப் போலவும்..
உலகமெங்கும்.

திங்கள், 15 நவம்பர், 2010

முகம் மாறி மாறி வந்த அசூரர்கள்

   01
அப்பாவிகளை வதைக்கும் அசூரர்களை
அவதரித்துக் கொல்லும் கடவுளர்கள் எங்களது.
நூற்றாண்டுகள் முன்பிருந்து
அசூரர்கள் முகம் மாறி மாறி வருவர்.
அம்மனாகியும் முருகனாகியும் சிவனாயும்
திருமாலாய் கணபதியாய் கடவுளர் உருவெறிக் கொல்வர்.

ஆன பின்னும்..

யுகம் யுகமாய் அசூரர்கள் வருவர் அப்பாவிகளை வருத்துவர்.
கடவுளர் அவதரிப்பர் கொல்லுவர்.
மீண்டும் மீண்டும் அசூரர்கள் வருவர்.
கடவுளர் அவதரிக்க..கொல்ல...

 02
புத்தியறிந்த முப்பது வருடங்களில்
ஆண்டுதோறும் அசூரர் பலர் வந்தனர்.
முகம் மாறி மாறி
சிங்க முகத்தோடும் யானை முகத்தோடும்
கடா முகத்தோடுமென

எதிர்த்துப் போரிட முருகர்கள் வந்தனர்.
அசூரரைக் கொன்றனர்.
முருகர்களை வெல்லமுடியதென அசூரர்கள் பயந்தொதுங்கினர்.
அசூரர்களின் துன்பத்திலிருந்து
நின்மதி வருமென அப்பாவிகள் காத்திருந்தனர்.

மீண்டும் மீண்டும்
அசூரர்கள் போரிட வந்தனர்.
முருகர்கள் உருவேறிப் பாய்ந்து 
விரட்டி விரட்டி கொன்றனர்.
முருகர்கள் நினைத்தனர்
அசூரர்கள் எப்போதும்
சிங்க முகத்தோடும் யானை முகத்தோடும்
கடா முகத்தோடுமே வருவர் என்று.
  
03
இம்முறை அசூரர்கள்
சிங்க முகத்தோடும் யானை முகத்தோடும்
கடா முகத்தோடு மட்டுமின்றி...
நரியின் குள்ள முகத்தோடும்
ஒட்டகம்,பசுவின் கருணை முகத்தோடும்
ஓநாயின் விசன முகத்தோடும்
நடு நடுவே
கடவுளர்களின் அகோர முகத்தோடுமென..
ஒரு தொகை முகங்கொண்டிணைந்து
எட்டுத் திக்குகளிலுமிருந்து
நவீன வாகனங்களில் ஜாலம் காட்டி .
பலமாகவலியவர்களாக வரம் பெற்று போரிட வந்தனர்.
கடவுளர்களில் பலரும்
அசூரர் பலம் பெற வரமளித்தபடியுமிருந்தனர்.

மாறாக                                                                 
முருகர்களினது புராதனமான மரபுகளோடிருந்தன.
பரிவாரங்களை நம்பிய முருகர்கள்
மயிலையும் சேவலையும் வேலையும்
கொடியையுமே..இழக்கவேண்டியதாயிற்று.
  
04
இம்முறை
கடவுளர்களை படைத்த எல்லோருமாக
அசூரர்களிடம் முருகர்களை தோற்றோம்.
மாங்காய்களை பறித்துத் தின்றும்
இலைகளை காதில் சூடியும்
திருப்திப்பட்டுக் கொண்டோம்.

இனி..
முருகர்கள் போரிட வராது விடினும்
அப்பாவிகளை வதைக்கவென அசூரர்கள் வருவர்.
ஆண்டுதோறும்
சிங்க முகத்தோடும் யானை முகத்தோடும் கடா முகத்தோடும்
மாறி மாறி...முகம் மாறி மாறி.

 

விழியோடல்கள்