திங்கள், 10 நவம்பர், 2008

சிலுவையில் ஏற்றிய சமூகம்




பேசாமல் போ.
இது வல்லூறுகள் வட்டமிடும்
வடக்கு... கிழக்கு... தேசம்.

வாய் திறந்தால்...
உன் தலையும் துண்டிக்கப்பட்டு
தசைகள் கிழிபட்டு
இரை தூவப்படலாம்.
பேசாமல் போ.

உனக்கு வாக்களிக்கும்
உரிமை மட்டுமே.
நாட்டில் வாழும் அருகதையோ
வாய் பேசும் சுதந்திரமோ இல்லை.

பேசாமல் போ.
மீண்டும் மீண்டும்
கல்லறைகளையே எண்ணிக்கொண்டிரு.

கவனமாய் இரு.
இன்றிரவே உன் கதவும்
தட்டப்படலாம்.

தட்ட திறபடவும்
கேட்க கொடுபடவும்
தேடியது கிடைக்கவும்
இது கிறிஸ்து வாழும் பூமியல்ல.

என்றாலும்
அவரை சிலுவையில் ஏற்றிய
சமூகத்துடன்
நீ உறவு கொண்டிருக்கின்றாய்
ஞாபகத்தில் வைத்திரு.

அதனால் பேசாமல் போ.

உன் முன்னோர்கள்
சொல்லியிருக்கக்கூடும்.
அன்று நடுநிசியிலும்
பயமின்றி தனியே
வீதியில் இறங்கினோம் என்று.

சுதேசிகளாய்
தாய் நிலத்தில்
அவர்களின் ஜீவிதம் தாய்மடி சுகம்.

இப்போது அப்படி
தெருநாய்களால் கூட
நடமாட முடியாது என்று
அவர்களிடம் கூறு.

விளக்கம் எதுவும் சொல்லாதே.
நம்மைப் போலவே
அவர்களுக்கும் விளங்காது.

பேசாமல் போ.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

விழியோடல்கள்