திங்கள், 10 நவம்பர், 2008

சிங்களச் சிநேகிதி

அதைச்
சோதனைச்சாவடி என்றுதான்
எல்லோரும் சொன்னார்கள்.

கூட்டத்தில் உள்ளவர்களுடன் சேர்த்து
நானும்
வரிசையில் அடுக்கப்படுகிறேன்.

அங்கே
நீர்க்காக்கைக்குள் தலைநீட்டிய
சில்லுப்புறா ஒன்று
எங்களை நோக்கி நகர

துருதுருப்பான விழிகள்.
துண்டாடும் பார்வை.
விரலிடுக்கில் அவள்
வில் பூட்டியிருந்தாள்.

கலியுகத்துக் கண்ணகியோ
கேட்கத் தோன்றும்.
உருவத்தில்
அவளும் பெண்தான்.
உள்ளுக்குள் அவளும் மனுசி தானா?

எனக்குள்ளே ஏராளம் கேள்விகள்.
மெல்ல மெல்ல வரிசை ஊர்கிறது.
இல்லை.
கொஞ்சம் கொஞ்சமாக அவளை நோக்கி
நெருங்குகிறேன்.

அவள் கண்ணில் தெறித்த
அத்தனை கிரணமும்
என் மீதே குவிகிறது.

ஒவ்வொரு தீண்டலிலும்
என் உயிர்க்குலை நடுங்குகிறது.
பர்சைத் தடவுகிறேன்.
ஏதோ பாசை தேடுகிறேன்.

அதிசயம்.

என் முகம் பார்த்துச்
சிரிக்கின்றாள்.

ஆ... அவள் தான்.

அன்று உடலையும்
உள்ளத்தையும்
காக்கிச் சீருடையில் மூடியிருந்தவள்.

என் சிங்களத்தோழி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

விழியோடல்கள்