புதன், 29 அக்டோபர், 2008

எனக்குப் பிடித்த வில்லுக் குளமும் வெண் தாமரைப் பூக்களும்

நினைவிருக்கு.

முதலில் நீ சிரித்த
நம் ஊரின் மேட்டு வாய்க்கால் பாலம்.
தூரத்தில் சாட்சிக்கு
வெள்ளை நிறத்தில் கொக்குத் தங்கும் கல்.

எனக்குப் பிடித்த வில்லுக்குளம்.
அதில்
உனக்குப் பிடித்த வெண்தாமரைப் பூக்கள்.

அறிந்தேன்.
இப்போது எனக்கென்று நீயும்
வில்லுக்குளத்தில் தாமரையும் இல்லையென்று.

நீலச்சட்டை, குடைவெட்டுப் பாவாடை.
குடைமூடிப் போகும் கன்னச் சுழிவிழும் முகம்.
நெஞ்சைத் தடவும் ‘சுஜாதா’வின் புத்தகக் கட்டு.
இடுப்பு வரைக்கும் நீண்டு இருண்ட பின்னல்.

நீ தலை குனிந்து நடக்கும்
தார் போட்ட கணேஸ் வீதி.

அறிந்தேன்.
இப்போது நீ தலை குனிவதும்
நம் ஊர் வீதிகளில் தாரும் இல்லை என்று.

பகலிலும் துணைக்கு வரும் தங்கை.
பாவம்
இது ஏதும் அறிந்திராத உன் அம்மா.
என்றோ..
கடைசியாய் பார்த்த காளி கோயிலடி இத்திமரம்.

இப்போது
உனக்குள்ளும் காதல் இல்லை
ஊரில் கூட நாம் இல்லை.

நீஉம் நான் உம்

உன்னில் எனக்கு
எல்லாமே பிடித்திருந்தது.
உன்னைத் தவிர...

என்னில் எனக்கு
எதுவும் பிடிக்கவில்லை.
என்னைத் தவிர...

திங்கள், 27 அக்டோபர், 2008

மாறிப்போன வாழ்வு

மாறியிருக்கும்.
உன் உடலும். முகமும்.

இப்போதெல்லாம்...

மஞ்சள் பூசியிருக்கமாட்டாய்.
கைவிரல்
மருதாணியையும் கைவிட்டிருப்பாய்.
மாறியிருக்கும் உள்ளமும் உணர்வுகளும்.

மறந்திருப்பாய்...
சிறுவயதில் வாங்கித் தின்ற
பலவண்ண சீரகப்பல்லி மிட்டாய்களை.
நானும் நீயும் பக்கமாய் இருந்து
சுவைத்த பாலும் பழமும்
குச்சு மிட்டாயோடு சேர்த்து
பார்த்து நெடுநாளாகிப் போய் விட்ட
என் முகத்தையும்.

இப்போது இல்லைதான்.

நீ ரசித்த என் அரும்பு மீசை.
நீ மாற்றச்சொன்ன முன்கோபம்.
தவிர
இன்னும் சிலவும்.

ஆனால்...

இன்னும் மாறாமல்
உன்னை நேசித்த உள்ளமும்
உனக்கு மட்டும் தெரிந்த  மிளகளவு மச்சமும்
மீதமாக.

அழுதிருப்பாய்
நீ அம்மாவானபோது.
நம் ஆசைகளைக்
காலம் நிராகரித்திருப்பதை நினைத்து...
இப்போது நானும்.

நீ அம்மாவாய்த் தட்டிக்கொட்டிய
கிண்ணிப்பிட்டின் மண்ணும்
நான் அப்பாவென்று
கட்டித் தந்த மணல் வீட்டு மண்ணும்
மாறாமல்
இன்னும் மணலாகவே.

சிரித்திருப்பாய்.
நீ என்னை தின்னச்சொல்லி தென்டித்த
சிரட்டைக்கறிச் சோற்றையும்
நாம் கடற்சிப்பிகளாய் சேகரித்த பணத்தையும்
எண்ணி.

தவறாக இருக்கலாம்.
என் நினைவுத்திணிவுகளை
நெஞ்சில் வளர்க்கிறாய் என்றும்
ஆசைக்காகவே  இடைவரை
நீளக்கூந்தல் வளர்க்கிறாய் என்றும்
நினைத்தது.

சிலவேளை நீ சிந்தித்திருப்பாய்.
தூரமானதால் துயரில்லை
அல்லாவிட்டால்
சிறகொடிந்திருக்கும் மனம் என்று.

மன்னித்துவிடு.
மன்னிக்கச்சொல் உன் கணவனையும்.
இன்னும் உன் நினைவுகள்
எனக்குள் இருப்பதால்.

அப்போதெல்லாம்


அப்போது நீ குமரிதான்.
அன்று நான் குமரனா
என்பது எனக்குத் தெரியாது.

ஆடையின்றிக் குளித்ததும்
நீ பார்க்க
அம்மா முதுகில் ஒளிந்ததும்
அப்படியே நினைவில் உண்டு.

அப்போதெல்லாம்
நானே என்
பல் துலக்கினேனா
என்பது என்
நினைவில் இல்லை.

நீ பேனா பிடித்து
படித்த நாட்களில்
எனக்கு உன்
பென்சிலைக் கொடுத்தது
நெஞ்சில் உண்டு.

அப்போதெல்லாம்...
நான் ஏதும் படித்தேனா
என்பது என்
நினைவில் இல்லை.

உன் இடையைக் கட்டிக்கொண்டு
உறங்கியதாயும்
விரலைப் பிடித்துக்கொண்டு
வீதியில் சுற்றித் திரிந்ததாயும்
ஞாபகம்.

அப்போது அதில்
விரசம் இருந்ததாக
நான் நம்பமாட்டேன்.

தவணை விடுமுறையில்
என்னைப்பிரிந்து நீ
உன் தாயோடு போய்விடுவது
தெரியும்.

அப்போதெல்லாம்
ஏன் விடுமுறை வருகின்றது
என்பதே அறியாமல்
மண்ணில் புரண்டு அழுததுண்டு.

நீ எச்சில்படக்
கடித்துக்கொடுத்த
மாங்காய்த்துண்டும்

உன்னோடு உப்புச்சேர்த்து
கல்லில் உரசித்தின்ற
புளியம் பிஞ்சும் அமிர்தம்.

அப்போது நீ குமரிதான்.
நான் குமரனா என்பது தான்...

ஆனால் அப்போதே
உன்னை நேசிக்கிறேன்
என்பது தெரியும்.

அன்று நீயும் என்னை நேசித்தாயா
என்பது தான்
இப்போதும் எனக்குத் தெரியாது.

நீ இல்லாது

தோற்றிருப்பேன்.
நீ என்னோடு
போட்டிக்கு வந்திருந்தால்

எதிலும் வென்றிருப்பேன்.
நீ என்னைக்
காதலித்திருந்தால்

சிலுவை மரங்கள்


நானும் நீயும்
சிலுவையின் இரண்டு மரக்கட்டைகள்.
இணைந்தேயிருந்தாலும்...
உன் பாதையின் குறுக்கே நானும்
என் எண்ணங்களுக்கு முரணாய் நீயும்.

தேடித்தொலைந்தவன்




காதல் என்னைக்
காணாது இருந்த காலங்களில்
காதலிடம் என்னைக்
காட்டிக்கொடுத்தவள் நீ.

நான் அதை
ஏற்காத போதும்
காதலை என்னுள்
திணித்தவளும் நீ.

உனக்குள் காதல்தேடி
என்னுள்ளேயே
காணாமல் போனவன்
மட்டும் நான்.

தேடித்தருவதாய்ச்
சொல்லி
என்னைத் திருடிப்போனவள் நீ.

முடிந்தால் புரிந்துகொள்

இலுப்பம்பூ எளியது
மலிவும் தான்.

ஆனால்

உனக்கு அதன்
இனிப்புத்தானே வேண்டும்.

புரிந்துகொள்
செருப்பே காலுக்கு
நல்ல துணையடி.

நீ நினைப்பதுபோல்
தங்கக்கொலுசுகள் அல்ல.

காதல் செய்தேன்

நேற்று மறைந்த
சூரியன் போல்
மீண்டும் உன் நினைவு
வருதே திரும்பத் திரும்ப...

கற்று மறக்க
காதல் செய்தேன்.
கண்மூட
உன் முகமே
கனவில் வருதே
திரும்பத் திரும்ப...

நிராகரிக்கப்பட்ட கவிதை

இடைக்காலவரைபாக
பொருத்தமற்றதென்று

மறுக்கப்பட்ட
உன் காதலுடன் சோ்த்து

நிராகரிக்கப்பட்டது.

என் இதயமும்
உன் நினைவுகளான
கவிதையும் தான்.

எழுது

முடிந்தால்
விரைவில் கடிதம் எழுது.
முடிந்தவரை
அதில் எல்லாம் எழுது.

முடியும்...
நீயும் எனக்கு
ஒரு கவிதை எழுது.

தண்டனை

உன் மனதைத்
திருடியதற்காகவா

உயிருடன் எனக்கு
இந்த மரணதண்டனை

பிரிவால்...

முள் ஏணி

அன்று எனக்கு
ஏணிப்படிகளாய் இருந்த
உன் காதல் தான்

இன்று என்
கால்களை முடமாக்கிய
முள்ளாக இருக்கிறது.

புன்னகை

கண்ணெட்டும் தூரத்தில்
நீலவானம்.

கைவிரல் தொடும் தூரத்தில்
வெள்ளை மேகம்.

மெய் சிலிர்க்காத
மென்குளிர்த் தென்றல்.

ஓ...!

நீ கண் சிமிட்டிப்
பேசுகின்றாய்.

தத்துவம்

பணத்தைச் சேமி
அன்பைச் செலவழி
வார்த்தையைச்
சிக்கனப்படுத்து

மௌனத்தை பரிசளி
புன்னகையுடன் உறவாடு
புரிந்து நடக்க
முயற்சி செய்.

நன்றியுடன்

என்னை உன் கணவன்
ஆக்கிக்கொள்ளத் தவறிவிட்டாய்.

பரவாயில்லை...

என்னை ஒரு
கவிஞனாக
ஆக்கிவிட்டாயே

நன்றி.

நீ, நான், கவிதை

புரிந்துகொள்ள முடியாதவைகளே
நல்ல கவிதைகளாம்.

எனக்கு நீயும்
உனக்கு நானும்
நல்ல கவிதைகள் தாம்.

முடியாத முடிச்சு

எல்லோரையும்
உன்னைப்போல
நினைத்ததில்லை.

உன்னைப்போல
எல்லோரையும்
நினைத்ததில்லை.

வாழ்த்தமட்டுமே முடியும்
கூடி உன்னுடன்
வாழவா முடியும்?

தூறாத மேகங்கள்

வெள்ளை மேகமாய்
வெளுத்த பூக்களாய்

எத்தனை ஆயிரம்
என் விதவைச் சகோதரிகள்

மேகமில்லை.
மின்னல் இல்லை.

அவர்களின்
கண்ணிலும் துளித்துளியாக பெய்கிறது
கண்ணீர் மழை.

நிஜம்

நீ இன்னும்
என் கண்களில் வாழ்வது
உண்மை என்பதால் தான்.

என் கண்ணீர்த்துளிகளிலும்
உன் முகத்தை
என்னால்
இன்னும் பார்க்கமுடிகிறது.

மீண்டும் வா

சரி போ!
நீ நிலவு என்றாலும்
சூரியன் என்றாலும்
என் வானத்திற்கு மீண்டும்
வரத்தானே வேண்டும்

அப்போது

நீ உதிர்ந்துவிட்ட
என் மனக்காம்பில்
மீண்டும்
பூவாய் துளிர்ப்பாய் என்று
நம்பாதே

தடை

உன் இதயவறைகள்
கீறப்பட்டதாய் அறிந்து
துடித்து ஓடிவந்தேன்.

நீ அன்று
சொன்னதையே
உன் கட்டிலறைக்கதவும்
சொன்னது.

‘உட்பிரவேசிக்கத் தடை’
என்று.

வைத்தியரும் சொன்னார்...

என்னைப்போல எதுவும்
இதயத்தினுள்ளும்
இருந்ததாய் தெரியவில்லை என்று.

சீதனம்

முத்திரைத் தலைபோல
உன் முகத்தை
மனது முழுவதிலும்
பதித்தாலும்

என் சித்திரமே
உன் சிவந்த மேனிக்கும்
என் அன்னை
சிறிதளவேனும்
சீதனம் கேட்பாளே

உன்னால்

அன்று
சிகரங்களைத் தடவினேன்.
பாதாளங்களில்
பயமின்றிக் கால் நுழைத்தேன்.

இன்று
என் சுவடுகளில் கூட
தடுக்கிவிழுகின்றேன்.

என் அருகில்
நீ இன்றித் தனியான போது.

ஞாபகம்

என் திருமணத் தேதியை
உன் திவசத்தேதியாக்குவேன்
என்றவள் நீ.

எனக்கு இன்னும்
ஞாபகமுண்டு.

ஆனால்...

உன் திருமணத் தேதியை
தன் திவசத்தேதியாக்கியவன்
என் நண்பன்.

நினைவிருக்கிறதா உனக்கு.

ஊமை பாஷை

நானும் கூட
மொழி ஏதும் அறியாத
ஊமையாகத் தான் பிறந்தேன்.

என்னைக்
காணும் போது மட்டும்
மெளனமாய்ச் செல்லும்
உன்னைப்போல...

உனக்குமா

இருட்டில்
நிலவு அழுவதைப் பார்த்து
சிரிப்பு என
சொல்லும் உலகம் இது.

மெழுகின் மரணமும்
மழை மேகத்துக் கண்ணீரும்
ஊருக்குச் சிரிப்படி

உனக்குமா?

நியாயம்

நீ என்னை வெறுப்பது
நியாயம் தான்.

நீ தான் என்னைக்
காதலிக்கவில்லையே

அதற்காக
என்னிடம் உன்னை
மறந்துவிடச் சொல்வது சரியல்ல

நான் தான் இன்னும்
உன்னைக் காதலிக்கிறேனே..

வியாழன், 23 அக்டோபர், 2008

அர்த்தப்பட முடிந்தவை

நீ என்னிடம் உள்ள
ஒரேயொரு கவிதைப்புத்தகம்

உன் மரபுகளை வெறுத்தாலும்
உன் வரிகளாவது
எனக்குப் பிடித்துவிடாதா என்ற ஆதங்கம்.


பார்வையிலும் வார்த்தையாலும்
ஸ்பரிசித்து உதடுகள் படபடக்கும் சாக்கில்
இதழ்கள் திறக்கும் போது
படித்துப் படித்துப் பார்க்கிறேன்
அர்த்தப்பட முடிந்ததெல்லாம்
வலிக்கும் அர்த்தங்கள் சிலவற்றை மட்டுமே

முளைத்துக் கருகிய செடியாக
மனதிற்குள் உன் காதல் என்றாலும்..

ஓடும் ரயிலின் முன்னே பாயும் எத்தனிப்புடன்
உன் ஆசைகள் மனதுக்குள்
முட்டி முட்டி அடங்கும்.

நினைவுகள் தேடி

வாசல் பலாமரத்தில்
குயில் கூவி
உன் கனவு கலையும்

கண்ணைக்
கசக்கிக் கொண்டு
குளியல் அறைக்குள் நுழைய
உனக்காய்
முதல் முதல் எழுதிய
‘கவிதை’ வரிகள்
நினைவில் வரும்

காலை உணவிற்காக அமர
வழக்கம் போல
வட்டமாய்ச் சில
மஞ்சள் நிற தோசைகள்
உன் முகத்தை நினைவு படுத்த

மதியம் வரை
பழகிய பாதை வழியே
நூலகத்தில் என...

உன் வரவு தேடி நேரம் கரையும்
தோற்ற பின்
செக்கல் வரையும்
உன் நினைவில்
கவிதைகளுக்காக
துன்ப வரிகள் தேடி
பேனா மூக்கு ஒழுகும்

இப்படியே...
உன் ஞாபகத்துடன்
மாரடித்து
நாள் முழுவதும்
கக்கிசப்பட்டுக் கழிய

இரவு பத்து மணியாகி
‘இதயராகம்’ கேட்டு
மனம் தேறிப்
பின் மீண்டும்
உன் கனவுகளுடன் தான் உறக்கம்

வழக்கமாக வாசலில்
பலாமரத்தில் குயில் கூவி
உன் கனவு கலைக்க
உன் நினைவு தேடி
குளியல் அறைக்குள்
மீண்டும்...

நீ, வரைந்தது

உற்று இன்னும்
உற்றுப் பார்த்தேன்
என்னைப் போலவும்

அழகாயும் குழம்பியும்
எனக்கு நீ ஆயும்
உனக்கு நான் ஆயும்

பிடித்தும் பிடிக்காமலும்
ஒரு வண்ணச் சிதறல்

விடை சொல்ல வா

பாதைகளில்
இப்போது
உன் சுவடுகள் இல்லை
படலையிலே தபால்க்காரன்
மணி ஒலிப்பது இல்லை

கடந்து சென்ற
கடைசி நொடி
நினைவில் இல்லை
உனக்கு
என் நினைவிருக்குமோ!
தகவல் இல்லை

ஆசைகளை அன்றே சொன்னேன்
ஆரவாரம் இல்லை
அன்று முதல் உன்னை மறக்க
நேரம் இல்லை

பேசிக்கொண்ட
வார்த்தை என்று
ஒன்றும் இல்லை

இருப்பதுவும்
இனி பேசிக் கேட்கும்
தூரம் இல்லை
பேசினாலும் இனியொன்றும்
பிரயோசனம் இல்லை

பேதலிக்கும் மனம்
சொல்லியும்
கேட்குது இல்லை
ஊருக்கெல்லாம்
தெரிந்த உன் காதல்

உருப்படாதவன்
வேலை

பய மயம்

எனக்கு பயம்
எங்கே
உன்னைக் காதலித்து
விடுவேனோ என்று...

நான் நானாகவே
நிசப்தமானபோதும் கூட.

எனக்குள் குளவிகள்
கூடுகலையும்
இரைச்சல் எழும்பும்

எனக்குப் பயம்
உன் ஆசைகள்
எனக்குள்
புற்று வளர்க்கிறதோ என்று

எப்போதும் என்
எண்ணங்களுக்கு மறுதலையாக
மொழி பெயர்க்கும்
உன் அணுகு முறைகள்
எனக்கு அவ்வளவாகப்
படிப்பதில்லை

நீ அழகியா என்றாலும்
அதில் எனக்கு
உடன்பாடில்லை
பிறகென்ன எனக்கு உன் மீது
இப்படியொரு பித்தலாட்டம்
புரியாது

உன் மதலை வார்த்தைகளை
நான் ரசிப்பதுண்டு
உன் தமிழ் எனக்கு
இனிப்பூட்டுவதும் உண்டு

எனக்கு பயம்
உன் வாய்மொழியை
அசைபோடுவதால.
என் தாய் மொழியை
தவறவிட்டு விடுவேனோ என்று

ஒற்றைப் பூவைத்
தொட்டு
மொய்க்கும் மட்டும் கூச்சலிட்டு
சுற்றிச் சுழலும்
ஏராளம் வண்டுகளுக்கு
நடுவே...

மௌனமாக வந்து
வண்ணம் பூசி தேன் குடித்துப்
போகும் வண்ணப்
பூச்சிகளுள் ஒன்றாக
இருந்து விடவே
நான் எப்போதும் எண்ணுவதுண்டு

ஆனாலும்...

எனக்கு பயம்
ஏதாவது வண்டுக்கு
கொடுக்கு நீண்டு
உன் மடியில்
தேன் தின்றுவிட்டுப்
போய்விடுமோ என்று

இருந்தாலும்
எனக்குத் தெரியும்
நீ எப்போதும்
வண்ணத்துப் பூச்சிகளையே
அதிகம் விரும்புகிறாய் என்று

நீ அறியாத நான்

இன்னும் இருக்கிறது
நீ வாசிக்காதது
என் கடிதம் போல

இன்னும் இருக்கிறது
நீ நேசிக்காதது
என்னைப் போல

இன்னும் இருக்கிறது
நீபேசிக்கொள்ளாதது
என்னை நீயும்
நேசிப்பதாய்
சொல்லாததைப் போல

இன்னும் இருக்கிறது
நீ புரிந்து கொள்ளாதது
என் மனதைப் போல

இன்னும் இருக்கிறது
நீ சேமிக்காதது
என் கவிதைகளைப் போல

இன்னும் இருக்கிறது
என்னில் நீ கொல்வதற்கு
மீதமாகவுள்ள
உன் நினைவுகளைப் ப

இன்னும் இல்லை
எனக்கு உன்னில் பிடிக்காதது
உன் மௌனத்திலும் கூட

நம்பிக்கையோடு

வீட்டு முற்றத்தின்
முருங்கை மரக் கிளையில்

ஒவ்வொரு நாளும்
பார்க்கிறேன்
அந்த ஒற்றைப் புறாவை
ஒரு வகையில்
இங்கு நானும்
சிலவேளை அங்கு நீயும்
இப்படித்தான்

அண்ணார்ந்தபோது
வெளிறிய முகத்தோடு
ஒட்டிப்போகும் மேகங்களில் ஒன்று

எனக்காக சில துளிகள்
அழுது விட்டுப் போனது
இப்போதெல்லாம்
இரவுப் படுக்கையில்
சில் வண்டுகளின்
சீட்டி ஒலி அதிக அலறல்

ஜன்னல் விசாரிக்கும்
வறண்ட காற்றின்
வாசமற்ற சுவாசம்
சொல்லிக்கொள்வது கேட்கும்
நீ என்னில் இருந்து
தொலைவாகி விட்டாய் என்று

ஏன் எப்போதுமே மணியடிக்கும்
என் ஊரின் தபால்க்காரன்
என் படலைப் பக்கம்
எட்டியும் பார்ப்பதில்லை

என் முனகல் சொல்லப் போகவும்
உன் முகவரியை யாரும்
அறிந்திருக்கவும் இல்லை
இரண்டொரு நாளாக
தெருக் கோடிப பலாமரத்தில்

காகம் ஒன்று
கரைந்து விட்டுப் போகிறது
சரி காத்திருக்கிறேன்
உன் காகித உறைக்காக
உள்ளே கடிதம்

இல்லையேல் கல்யாண
அழைப்பிதழ் ஒன்றையேனும்
அனுப்புவாய் என்ற நம்பிக்கையில்

நினைவுகளுடன் தொங்கியபடி

எந்தப் படுக்கையும்
மடி தருவதாயில்லை
உன் நினைவுகள்
என்னை விடுதலை செய்யாத
வரையில்

வீதியில் ஏதேனும்
சிரிப்பு ஒலி வந்து
காதுகளுக்கு அருக
கொலுசு கிலுக்கினால் போதும்

ஏதோ ஞாபகத்தில்
இப்போதும்
என் ஜன்னல் கதவுகள்
திறந்து கொள்கின்றன

ஆனால்...
அமாவாசை இரவில்
நிலா தேடிய குழந்தையாக
எப்போதும் போல

என்னைச் சுற்றி
வெறுமை மட்டுமே எஞ்சும்

யார் சொல்லியும்
முகத்தில் ஒட்டிய
உன் உதடுகளை

வழித்து எறிய முடியாமல்
தனிமை தேடி தாகமெடுத்து
அலையும் மனது

என் வீட்டுச் சமையலில்
மஞ்சல் சேர்ப்பதை
யாரும் நிறுத்தாத வரையில்

மனதில் இருந்து
உன் முகத்தை மட்டும்
எப்படி என்னால்
மறக்கடிக்க முடியப்
போகின்றது

இப்படியே
வீட்டுப் படலையின்
இலந்தை
மரத்தில் தொங்கிக் கிடக்கும்

கூழாங் கற்களாக
உன் நினைவுகளைத்
தேக்கிய படி

இன்னும் எத்தனை நாள்
நான்.

நீ மட்டும்

ஏனோ தெரியாது
நீ என் கனவுக்குள்
எப்போதுமே நுழைவதில்லை

எல்லோரும் விசாரித்தார்கள்
நீ
எனக்குக் காதலியா என்று
சிலரிடம் மட்டும்
சொல்லி இருக்கிறேன்
நீ மட்டும்
அதற்கு முயற்சிக்கிறாய் என்று

நண்பன் ஒருவன்
சொல்லிக்கொண்டிருந்தான்
திருவிழா கூட்டத்தில்
பல சோடிக்கண்கள்
உன் மேல்
கூடுகட்டியதாமே

இருந்தும் அதற்குள்
ஒளி விட்டபடியே
உன் கண்கள்
அங்கும் என்னைத் தேடியதாமே
கேட்டபோதே
திக்..திக்.. என்கிறது

ஒரு தடவை
நீ சொன்னாயே
ஒடி ஒடிப் போனாலும்
ஒற்றைக் கால்க் கொக்காக

உன்னைக் கொத்திப் போவேன்
என்று

என்னுள்ளே

என் மீது மட்டும்
ஏன் உன் விழிகள்
இத்தனை விசனப்பட்டுக் கொள்கின்றன

இன்னும்
எத்தனை காலங்கள்
பார்வையால்விரட்டி
என்னை துரத்திக்
கொண்டிருக்கப் போகின்றாய்

சூரியன் சுட்ட
படுவான் அழகை
ரசித்து கொண்டிருக்கும் நீ...

எப்போது
தூரத்தில் நின்றேனும்
என்னைத் துகிக்கப் போகிறாய்

இருவேறு துருவங்களாய் இருக்கும்
நாம் எப்போதுமே
இணைந்து கொள்ளப் போவதேயில்லையா

இதயங்கள் நன்றாய்
விலைபோகும்
இன்றைய பொழுதுகளில்
இறைச்சி விலைக்கேனும்
என் இதயத்தை
எடுத்துச் செல்ல மாட்டாயா

வசதி

நெருப்புத் தானடி
எரிக்கும்
உன் வார்த்தைகளுக்கு
ஏதடி அந்த வசதி வந்தது

வந்து விட்டுப் போ!

என் வாழ்க்கைத் தொண்டைக்குள்
நீ தேனாய் வந்து
ஊறாது விட்டாலும்

ஒரு முறை
நஞ்சாக ஏனும்
கசிந்து விட்டுப் போ

உதவி செய்

முடிந்தவரை
என்னை சுவடு தெரியாமல்
சுட்டுவிடு

மீண்டும் மீண்டும்
உன் அடையாளங்களோடு
உயிர்த்து
செத்து வாழ்வதை விடவும்

முடிந்தவரை...

கவிதை

ஒரு பனிக்கட்டிச் சூரியனைப்
பார்த்ததாய் ஞாபகம்
நீ என்னைக் கடந்தபோதில்

இனி எதையும்
கவிதை என்று சொல்லப்போவதில்லை
உன் விழிஆடல்களைத்
தவிர

நிலவுசுட்ட நாட்கள்

உன் கொஞ்சல்
மொழிகளுக்காய் கொஞ்சக்காலம்
நான் கெஞ்சித்
திரிந்த அந்த நஞ்சு நாட்கள்

கொட்டக் கொட்ட
விழித்து உறக்கம் விரட்டி
பக்கம் பக்கமாய்க் கவிதைகளைக்
கொட்டிக் கிறுக்கிய
சில கொள்கையுள்ள நாட்கள்

யாருக்கும் தெரியாமல்
என் இரகசியப் பெட்டகத்தில்
நீ ரசித்தவை
எல்லாம் சேமித்த
சில செல்லாத நாட்கள்

ஊருக்கு வெளியே
உன்னைக் காண்கையில்
உள்ளத்தின் உண்மைகளை
உரக்கக் கத்தி
உன்னிடம் உளரத் தோன்றிய
அடடா!
அந்த உத்தமமான நாட்கள்

என் காதல் வேருக்கு
நானே...
நீர் ஊற்றிக் கொண்டிருக்கையில்

உன் பெயருக்குப் பின்னும்
நெற்றிக்கு மேலும்
எவனோ இடம்பிடிக்க
கன்னத்தைக் கண்ணீரும்
நெஞ்சை உன் நினைவுகளுமாக

எரிமலைக்குழம்பாக
குமுறி சுட்டுப்போன
அன்றைய சூடான நாட்கள்
நினைவுகள்
சுடும் நாட்கள் மட்டுமல்ல

அவைதான் எனக்கு
நிலவுசுட்ட நாட்கள் கூட

என்னை உனக்கு

எப்போது உனக்கு
என் மௌனத்தை
மொழி பெயர்க்க முடிகின்றதோ

அப்போதே உனக்கு
என் மனதும் புரியும்

காதலித்து விடாதே

அவளைத் தொடமுடியும்
தூரத்தில் நில்
தொட்டுவிடாதே
பார்வையின் முடிவினில் நில்
மறைந்துவிடாதே

பார்க்கும் இடத்தில்
எல்லாம்
கொஞ்சம் பேசு படபடக்காதே

பாதையோரம் கண்டால்
பளிச்சென்று சிரித்துவிட்டுப்
போய்விடு

பக்கத்தில் என்றாலும்
பேசாதே
உன் ஆசைகளை சேமித்துக்கொள்
சொல்லிவிடாதே

அவள் அழகை
மீண்டும் மீண்டும்
ரசித்ததாகச்சொல் மறந்துவிடாதே

அவசரத்தில் வாக்களிக்காதே
அங்கும் இங்குமாய்க்
காத்துக்கிடக்காதே
பரிசுப்பொதிகள் கடைவிரிக்கும்
நீ ஒன்றும் பதறிவிடாதே

உரிமையுடன் ஊடல் கொண்டால்
உடனேயே மன்னிக்காதே
தனிமையில்
சந்திக்க நோ்ந்தால்
நீ மட்டும் தடுமாறாதே

தயக்கத்துடன்
அவள் பேச்சிருக்கும்
கவனம் காதலித்து விடாதே

அவளைப்போல


அங்கே அலைகளுக்குப் போட்டியாக
தம் பாதப்பதிவுகளை
பாதுகாக்கத் துடிக்கும்
ஆயிரம் சோடிக் காதலர்கள்

என் கன்னத்துத்
தாடிக்குத்
தலை சீவிக்கொண்டது
ஞாபகச்சீப்பு

நான் சட்டைப்பொத்தான்களை
பூட்டத்தொடங்கியதும்
என் முகத்தைச் சவரக் கத்திக்கு
அறிமுகப்படுத்தியதும்
அவள் எனக்கு அறிமுகமான
பிறகுதான்

என் கண்ணைப்
பார்த்துக்கொண்டே
அவள் பொட்டுவைப்பதும்
அவள் கன்னத்தைப்
பார்த்து நான்
தலைசீவிக்கொண்டதும் அப்போது

நான் ‘அலைகள் ஓய்வதில்லை’
பார்த்தது முதலாய்
அவளில் காதல்கொண்டவன்

அவள் ‘அலை பாயுதே’
பார்த்ததும்
என்காதலை வெறுத்தவள்

ஆற்றுப்படுகையாக
எங்கள் மனக்கலப்பும் ஆவியுயிர்பாய்
மனக்கலைப்பும் எங்களில் முடிந்தது

இந்த கொஞ்சநாட்களாய் தான்
கடற்கரை ஓர காலடிபோல்
என் காதல்ஞாபங்கள்
மெதுவாய் கரைந்து கொண்டிருக்க

அதற்குள்...

மீண்டும் அலைகளுக்கு போட்டியாக
ஆயிரம் காதலர்கள் அங்கே
இங்கு என்னைப்பார்த்து
ஒரு அலைநண்டு சிரிக்கிறது
நுரைக்குள் ஒளிந்துகொண்டு

அவளைப்போல...

மரணம் வரையில்

ஒரு மழை நாள்
உன் வாசலில்
நீ முகம் பார்த்த நீர்க் குமிழியில்

உன் முகத்தோடு
என் முகம் சோ்த்து
பார்க்க முனைந்தபோதே
உடைந்துபோன
மழைநீர்க் குமிழியை

உன் கடவுளுக்கு முன்
நீ தீவைத்த
சூடத்தின் சுவாலையை
அணையாமல்
என் கைவிரல்கள் மூடிக் காத்தபோது
தீபம் அணைந்து
கரி மட்டும்
என் கைநனைத்தபோது

உருகிய சூடம் போல
உன் முன் உருமாறி
நின்றேனே
மாமரத்து நிழலில் நீ
மண்டியிட்டு அழுதது அறியாமல்
உன் மண்டையில்
குட்டுவைத்து

தட்டில் வழிந்து தேங்கிய
உன் கண்ணீர்க் கரைசலை
தொட்டுத் தொட்டே மாங்காய் தின்றது

நீ தொலைத்த
இரண்டு ரிபன்களுக்காய்
கண்ணீர் வராமல் சிணுங்கியபோது

நான் கண்டெடுத்ததாய்
சொல்லி நான்கு ரிபன்கள் தந்தேனே
வீட்டில் புதுகறுப்புக்
குடையை கிழித்ததற்காய்
அடிபட்டேனே

உனக்காய் எழுதிக்கொடுத்த
கவிதைநோட்டின் கடைசித்தாளில்

கடற்கரையோர கடையில்
கடலை மடித்துக் கொடுத்தபோது
கடலைப் போலவே
கலங்கிநின்றேனே

நீயே... என் கனவில்
வருவதாய்ச் சொல்ல
காத்திருந்த என்னிடம்

என் நண்பனை விசாரித்தபோது...

போலியாய் சிரித்தேனே
‘போங்கோ அண்ணா’ என்றாயே
மறப்பேனா
என் உயிர் மரிக்கும் வரையில்

ஏன்

என் கண்ணீரின் ஈரத்தில்
காய்ந்த விறகெல்லாம்
வோ் விடுகையில்

ஏய், காதலி
நீ மட்டும்தான்
இன்னும் என் கல்லறைக்கு
நிலம் தேடிக்கொண்டிருக்கின்றாய்

கல்லூரி வாசலில்

கூட்டம் கூட்டமாய்
வெள்ளை மேகங்கள்

அதனிடையே
ஒளிந்தொளிந்து போகும்
ஒற்றை நிலவாய்
எனக்குப்பிடித்த உன்முகம்

அவ்வப்போது தோன்றிமறையும்
வானவில்களாக
அவசர அவசரமாய் உள்நுழையும்
உன் வகுப்பு ஆசிரியைகள்

வெடுக்கு வெடுக்கெனத்
திரும்பிக்கொண்டு
மின்னல் தீயாய்
அங்கும் இங்குமாய்
குறுக்கிடும் உன் அதிபர்

அதற்கிடையே
இடி இடித்து ஓய்வது கணக்காய்
உன்னை அழைக்கும்
ஒன்றுகூடல் மணிஓசை

மழைக்கு வானம்பார்க்கும்
உழவனாய்
உன் வருகைக்காக
வெளியே காத்திருக்கும் நான்

என் எல்லாவித எதிர்பார்ப்பையும்
உடைத்தெறிந்து விட்டு
உற்றுப்பார்க்கும் சூரியனாய்

வாயிலில் முறைத்தபடி
காவலாளி.

என்ன சொல்லப்போகிறாய்

நீயும் கூட
‘மோனலிஸா’ தான்
உன் புன்னகையின் அர்த்தமும்
புரியவில்லை எனக்கு

என் பேனாமுனையும் காகிதமும்
எனக்காக உன்னிடம்
பேசவரும் போதும்
உன் விழிகள்
என்னை சந்திக்கும்போதும்

உன்னிடம் கேட்பதெல்லாம்
ஒன்றைத்தான்
நான் உனக்கு
என்ன உறவு?

உன் மாற்றத்துக்காக

உறவுகளைச் சிறைவைக்கும்
தத்துவத்தை
உன் பக்கமான பொழுதுகளில் தான்
பழகிக்கொண்டேன்

உடைப்பெடுக்கும்
ஆசைகளினால் உன்னை கட்டிப்போட
என் வார்த்தைகளுக்குக் கூட
வசதி போதாது என்பதை
நீ அறியமாட்டாய்

அறியும் பொழுதுகளில்
என் நிஜங்கள் உனக்குத்
தீனி போடாது என்றாகி
நீ என்னை அருவருக்கவும் கூடும்

அந்த நொடிப்பொழுதிற்காய்
காத்திருக்கிறேன்
சாவினை அறிந்தும்
திகதி தெரியாத
நம் ஒவ்வொருவரையும் போல

பிள்ளைக்கால விளையாட்டுத்தனம்

நீ விடைபெற்ற சில நொடியில்
சிதறிப்போன என் சுயத்தைத்
தேடிப்பொறுக்கி சேமிப்பதற்குள்ளாக

எனக்குள்
ஆயிரம் சிலுவைகளை
சுமந்து தவி்த்த உணர்வு
தவறு ஒன்றுக்காய்
நீ தவித்த பொழுதுகளில்
மழை நேரத்துத் தாழ்வாரப்பீலியாக
மனம் அழுது வடித்தது பற்றி
நீ அறியமாட்டாய்

என் மௌனத்தைக் கலைப்பதற்காக
நீ மனநோயாளியாகி
என் பின்னே பிதற்றித் திரிந்ததும்
உன்னை மாற்றத் துணிந்த
என் அத்தனை முயற்சிகளும்

பிள்ளைக்கால
விளையாட்டுத்தனம் என்றாலும்
அவை என் மனதை பிசைந்து
உன்னை என் மனதிற்குள்
கல்வெட்டாய் வார்த்துவிட்டுப் போனது
என்பதே உண்மை.

நான் தான் நம்பு

உனக்குப் பிடிக்கும் என்றும்
உன்னைப் பிடிக்கும் என்றும்
கவிதை எழுதியவன்

உனக்கு உறவானதால்
என் எதிரிகளையும்
நண்பர்கள் ஆக்கியவன்

உன்னைத் தவிர
எந்தப் பூக்களுமே அழகில்லை
என்றவன்
உன்னோடு பேசியே
தமிழ் மறந்து போனவன்

உன் மடியில் உறங்கி
மீண்டும் என்
தாய்மடி சுகம் கண்டவன்

உன்னைப் பிரிந்ததற்காய்
வெட்ட வெளியில் நின்று
தனியே வாய்விட்டு அழுது பார்த்தவன்

நீ வாழ்வதற்காகவும்
நான் வெல்வதற்காகவும்
தோற்றுப்போனவன்

உன் கூண்டுக்குள்
நுழைவதற்காய்
சிறகுகள் நறுக்கிக் கொள்ளவும்
உன் குடிசைக்குள் வாழ
தலை குனியவும் தயாரானவன்

நீ சிரிப்பாய் என்றால்
எவர் முன்னும் கோமாளி ஆகி
கோழையாகத் துணிந்தவன்

எல்லாமே
நான்! நான் மட்டும் தான்
நம்பு.

எப்படி

உன்தாய்
ஏதும் மலர்விதை விழுங்கினாளோ!

பின் எப்படி
நீ வந்து மலர்ச்செடியாய்
அவள் மடியில் முளைத்தாய்?

நீ, அவளாய் இல்லை

மனம் முழுவதும் ஏதோ
ஆரவாரம்.

வாத்தியார் இல்லாத
வகுப்பறை போல

முண்ணான் சொல்ல
முகம் முழுவதும் சிரித்தேன்.

வகுப்பேற்றப்பட்ட
கடைசி மாணவனைப் போல

பத்து வருடம் கடந்து நீ
என்னைப் பார்த்தும்
கடந்து போகின்றாய்.

இன்னும் அதே
அழகுடன் உன் சோடி விழிகள்.

குழந்தைகள் பிய்த்து
கூந்தலின் நீளம் மட்டும்
கொஞ்சம் குறைந்திருக்கிறது.

எதிர்பார்த்தேன்.

நம் கண்களுக்கு நடுவே நீண்ட
ஒரு நிமிட தூரத்தில்

நீ ஒரு முறை
ஏனும் சிரித்திருக்கலாம்.

வேண்டாம்
ஒரு துளியேனும் அழுதிருக்கலாம்.

இல்லை...

எதிர்பார்த்தேன்.
நீ என் பக்கமாய் கடந்த
ஒரு நொடியில்

பத்து விரல்கள் வேண்டாம்.
அதில் ஐந்தையாவது
என் பக்கம் அசைத்துவிட்டுப்
போயிருக்கலாம்.

எதிர்பார்த்தேன்.
ஒன்பது வருடங்கள் உன்னுள்
ஒளிந்து கொண்டாலும்
கடைசியாய்
நீ என் கை தடவிப்போன

ஒரு நிமிடமாவது
உன் நினைவில் ஓடிவந்திருக்க வேண்டும்.

உடன்படுகிறேன்.
இன்னும் உன்னில் ஒட்டி
இருப்பதென்னவோ
எனக்குப் பிடித்த உன் முகம்.

இப்போது நீ அவளாய் இல்லை.
ம்... ம்...
அவளாய் நீ மட்டும் தான் இல்லை
‘திரு மதி’.

முடியும்

மரணம்
என்னைக் கொல்லாது.

சிலவேளை...

உன் மௌனம்.

புதன், 22 அக்டோபர், 2008

அதிசயம்

நீ என்
நிழலைத் தானே
மிதித்துச் சென்றாய்.

என் நெஞ்சில்
எப்படி உன் சுவடுகள்.

மன்னித்துவிடு

யாரும்
தெரிந்திருக்க நியாயமில்லை.
உனக்கும் கூட
அது தேவைப்படவில்லை.

என்னைத் தவிர
எவருக்கும் நீ அழகி இல்லை.
உன்னைக் கவரும் எதுவும்
என்னிடமும் இல்லை.

பார்த்துக் கொண்டதில் சுகம்.
பக்கமாய் இருந்தும்
தொட்டுக் கொள்ளாமல்
பழகியதில் சுகம்.
கொஞ்சமாய் மொழிகள்
பகிர்ந்து கொண்டதிலும் சுகம்.

பின்...
விட்டுப் பிரிந்து தனியே

நான் மட்டும் சில துளிகள்
அழுததிலும் சுகம்.

ஒத்துக் கொள்கிறேன்.

எப்போதும்
நீ என்னை நேசித்தாய் என்றும்
இப்போதும் நீ...
என்னை காதலிக்கவில்லை என்றும்.
 

விழியோடல்கள்