செவ்வாய், 21 டிசம்பர், 2010

கலைக்கப்பட்ட பட்டு வேட்டிக் கனவுகளும் களவாடப்படும் கோவணங்களும்.

நீ..முதுகை அலங்கரிக்கும்
பட்டுப் போர்வைகளுக்காக அலைந்து திரிகிறாய்.
நானிங்கு..
பருத்திக் கோவணத்தை
காப்பற்றிக்கொள்ள கஷ்டப்படுகிறேன்.
உனது கவனம்
ஆரோக்கியமான பட்டுப் பூச்சிகளின் மீதே கவிந்துள்ளது.
எமது சிரத்தை எல்லாம்
அரைநாண் அறுந்துவிடாதபடி பிடித்திருப்பதிலும்
அதையின்னும் பலப்படுத்துவதிலும் தேங்கிக் கிடக்கிறது.
நீ.. உனக்குத் தேவையான பட்டுப் பூச்சிகளை
எமது முற்றத்தின் பருத்திகளை தின்று வளரப் பணிக்கிறாய்.
நானின்னும்
அதன் வேர்களுக்கு நீர் ஊற்றி துளிர் வளர்க்கிறேன்.

நீ.. நிலவின் வட்டம் பற்றிப் பேசிக்கொண்டிருக்க
நானதன் குழிகளைப் பற்றி சிந்தித்துக் கொண்டிருக்கிறேன்.
இருளைக் கழுவும் நிலவொளியின்
கரையற்ற பிரகாசத்தில் நனைந்திருக்கும்
எமது முற்றத்தின் மணல்வெளியில்
இன்னும் விரிக்கப்படாதிருக்கும்
தொட்டாச்சுருங்கியின் இலைகளைப் போல
துயின்றிருக்கும்
எமது குமருகளைப் புணரவும்
குடிசைகளைப் பொசுக்கவும் என..
சாணக்கும்பிகளைப் போல இருண்ட திட்டுக்களுடன்
நீ குறிகள் விறைக்கக் குந்தியிருக்கிறாய்.
முன்பையதைப் போலொரு மலர்ச்சிக்கான
எதிர்பார்ப்புடன்
அமைதியான நிமிடமொன்றுக்கான தவிப்புடன்
இன்னும் காத்துக்கிடக்கிறேன்.
உனது பட்டுப் பூச்சிகளில் உருவி எடுக்கப்படும்
பளபளப்பான நார்களால்
எமது கோவணத்தையும் அலங்கரிப்பதற்காக.               
 

விழியோடல்கள்