திங்கள், 10 நவம்பர், 2008

குமிழ் உடைந்த பேனா


முழுச்சூரியனை
விழுங்கிச் செரித்த இறுமாப்பு.
அழகாய் நிலவைப்
பெற்றெடுத்த பூரிப்பு.
கோடி நட்சத்திரங்கள்
துணைக்கு வந்த தெம்பு.

இப்படியே கட்டி இருளைக்
கக்கிக்கொண்டே
ஒரு இரவின் உறக்கம்.

சட்டென எஜமான் போட்ட
மொத்த உப்பின் உரப்பையும் திரட்டி
விசுவாசத்தின் வெளிப்பாட்டுடன்
ஊர் நாய்களின் மிரட்டும் அதட்டல்.

எனக்கு நல்ல பரிச்சயம் உண்டு.
மனித நடமாட்டங்கள் இன்றி
இப்படி உணர்வு
ஊர் நாய்களுக்கு வராது.

காதுகள் விரிந்து கிடந்தன.
இன்னும் சில நிமிடங்களில்...

ஏதோ ஒரு திசையில்
வேட்டு ஒலி கேட்கலாம்.
எங்கோ ஒரு வீட்டில் அழுகுரல் முனகலாம்.

குப்பி விளக்கொன்று
வீட்டுப் படலை நோக்கி கண்சிமிட்ட
சில முண்டங்கள்
சிணுங்கலுடன் நகர்ந்தன.

தழுதழுத்த குரலில்
அடுத்த வீட்டு அம்மா.
என்னுடைய மகனை
எவரோ வந்து கூட்டிப்போராங்கள்.

கதவோரம் நசுங்கிய விரலாய்
பதற்றத்துடன் அழுதாள்.

எங்கோ ஒரு திசையில்
சில வேட்டொலிகள்.
எல்லோருக்கும் நெஞ்சுக்குள் கனத்தது.

ஞாபகத்திற்கு வந்தது.

எப்போதும் அவர் கையில்
பேனா இருக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

விழியோடல்கள்