திங்கள், 21 பிப்ரவரி, 2011

யுத்தமில்லாத யுத்தகாலத்திலிருந்து விடுபடுதலின் பின்னாக




புலிகளும் பிரபாகரனும் பயங்கரமேதும்
மற்றும்
பயங்கரவாதிகளென்றழைக்கப்பட்டவர்களெவரும்
இல்லையென்றாகி
நாடு முழுவதும்
குண்டு வெடிப்புக்கான சாத்தியங்களும்
குண்டுகளை வைப்பதற்கான தேவைகளும்
வெடிக்க செய்யும் போராளிகளும்
வைத்திருந்தாலும் வெடித்தாலும் கண்டெடுத்தாலும்
புலிகள் வைத்ததற்கும்
சந்தேக நபர்களைப் பிடிப்பதற்கும் சாத்தியங்களினியிராது.

சுற்றிவளைக்கவும்
குடும்ப அட்டைகளை சரிபார்க்கவும்
நிழற்படங்களை சேகரிக்கவும் தலையாட்டி வைக்கவும்
விசாரணைக்கு அழைத்துச் செல்லவும்
கைது செய்ய.. காவலில் வைக்க..
இனியும் அவசியமற்றதாம்.

நாடு சுதந்திரமடைந்துவிட்டது
பயங்கரவாதம் தோற்று 
சுமுகநிலையொன்றும் வந்தாயிற்று.
வடக்கிலும் கிழக்கிலும் தமிழரை அழித்து
அநாதைகளாக்கி அகதிகளாக்கி 
குடிலில் வைத்த நிலங்களை 
சுற்றி உலவி பார்த்துவர
சுதந்திர தேசத்திலுள்ள எவருக்கும் இயலுமாயிருக்கிறது.

ரோந்து நடக்கத் தேவையும்
வீதியில் போய் வருவோரை முறைக்கவும்
விசாரிக்கவும் தாமதப்படுத்தவும் தடுத்து நிறுத்தவும்
காரணமேதுமின்றிப்போயிற்று.
கண்ணி வெடிக்காது கைக்குண்டு வீச்சிராது
இனி
காணாமற்போவோரும் கடத்தப்படுவோருமிரார்.
மறைந்திருந்து சுடுவதும் சுடுபடுவதும்
வீதியில் டயர்களுடன் சேர்ந்து கருகுவதும்
நிகழவே நிகழாது.

பிள்ளை பிடிப்பாரில்லை
வெள்ளை வாகனங்களில் ஏற்றுவாரில்லை
குமருகள் மாலையில் தொலைந்து 
புளை சிதைய மற்றோரிடத்தில்
மறுகாலையில் மீள்தலும் இயல்பாயிராது.
இளந்தாய்களை இரவுகளில் 
இனமறியாதோரெல்லாம் வன்புணர்தலும்
இளந்தாரிகள் இரக்கமின்றி
தெருவோரம் சுடப்பட்டழுகிக் கிடப்பதும்
இனியயினிய இந்நாட்டில் இராதென்றே சொல்கிறார்கள்

பத்திரிகைகள் செய்பவர் செய்திகளை சேகரிப்போர்
பக்கக் கட்டுரைகள் பத்தி எழுத்துக்காரர் 
பட்டப் பகலில் சுடப்படுவதுமிராது.
கட்சியுறுப்பினர்கள் மக்களின் மரியாதைக்குரியவர்கள்
உரத்து மறுத்து எதிர்த்து கண்டித்து
குரல் கொடுப்பவர்கள் என..
நள்ளிரவுகளில் குடும்பத்தினர் முன்பாகவே 
அழைத்துச்செல்லப்படுவதும்
அவர்களது நிலை
பின்நாளில் அறியக்கிடைக்காததும்
அங்கு எங்கேனும் ஆற்று வாய்களில்
அலங்கோலப் பிணங்களாவதும் 
ஜனநாயக நாட்டில் இனியறிய முடியாது.

அடையாள அட்டைகளில்லாதிருப்பதும்
தொலைத்தலும் வீட்டில் விட்டு வருதலும்
"பயங்கரவாதிகளின் அடையாளங்களில்லை"
என்றுரைக்கும் சட்ட நடைமுறையும்..
இருக்கும் தமிழர் அனைவருமே
பயங்கரவாதிகளென்னும்
காரண காரியங்களும் இல்லாதொழியும்.
வேட்டுக்குத் தப்பி சரணடைந்தால்
சுதந்திர நாட்டில் தொழில் பயில முகாமுண்டு.
ஆண்டு பலவாய் தடுப்பு சிறைகளில் 
சந்தேகப் பெயர்களுடன் சாவதும் இனிமாறும்.

தனி நாடும் கோருவதற்கு யாரும்
தமிழர் தனியினமாக வழுமிடங்களும்
சின்ன வன்னி, குட்டி யாழ்ப்பாணம் எனும்
வடக்குப் பெயர்கள் வழக்கிலும் இல்லாது போக..
அநேக தமிழருக்கு சொந்த வாழ்நிலங்களே 
அனுமதிக்கப்படாதும்
அகதிகள், அநாதைகள், அடிமைகள், ஏழைகள்
இழிச்சவாயர்கள், ஏமாளிகள், அடிவருடிகள்,
துரோகிகள் எனும் மறுபெயர்கள்
பல்லாண்டுக்கு அடையாளமாவதும்
புலிகள்
என்றவொரு பெயருக்கிருந்த மரண பயமும்
புல்லுருவிகளிடமிருந்தும் தேசியக்கள்ளர்களிடமிருத்தும்
அப்பாவிகளுக்கிருந்தவொரு பாதுகாப்பும் கூட..
எப்போதுமே இனியிராது போகட்டும்.

வியாழன், 17 பிப்ரவரி, 2011

கைகள் உள்ளவரெல்லாம் கவனிக்கவும்


அதிமேதகு, மேதகு கெளரவ, அதியுயர், மரியாதைக்குரிய, 
    *இதில்   ஏதேனும் ஒன்றினையோ அல்லது பலதையோ
     பெயரின் முன்னாக இட்டுக்கொள்ளலாம். 


மதிப்புக்குரிய கனவான்களே!
(எனதல்ல)

உங்களது வசதிகளை அதிகப்படுத்தும்
வழக்கமானதும்  வளமானதுமான உங்களது கடமை வருகிறது.
வேறென்ன 
மீண்டுமொருமுறையுங்களது திருவிழா. 
எங்களது வரிப் பணத்தில் நீங்கள் கொண்டாடும் கொள்ளையிடும் 
சண்டையிடுவதற்குமான  நாட்கள்.

முன்னைய நாட்களில் தேவைப்பட்டது.
பிரதிநிதிக்கான போட்டியின்போது தகமைகள்
சிறு தொகையினரின் நன்மதிப்பும் செல்வக்குமென...
மேலும்
வாயும் நாக்கும் பேச்சாற்றலும்ஆளுமையும் 
தைரியமும் கடமையுணர்வும் கருணையுள்ளமும் 
கண்ணியமும் ஒழுங்கும் பண்பும் பணித்திறனும்   கூட.

இனியது அவசியமற்றதாகிறது.

நினைத்தவரெல்லாம் முன்வரலாம் 
சண்டியர்கள் சந்திப்பெடியங்கள் செல்வாக்கும் 
செல்வமும் உள்ளவர்கள்
இறால் போட்டு சுறா பிடிக்கத் தெரிந்தவர்கள்
சுத்துமாத்து குள்ளத்தனம்
குடிகாரக் கும்பல்களின் தலைவர்கள்
மற்றும் 
முன்னைய தேர்தலில் பிரசாரம் செய்யும்
கட்சி ஊர்திகளில் அலைந்தவன்
சுவரொட்டிகளை ஒட்டியவர்கள்
வீரப் பாடல்களை ஒலிக்கச் செய்தவர்
பந்தல் கதிரைகளை ஒழுங்குபடுத்தியவன் 
இவர்களில் யாரும் வாக்குக்கேட்டு முன்வரலாம்.

இம்முறை  மக்களை  ஏமாற்ற மட்டும் முடியாது. 
அவர்களிடம்  எதிர்பார்ப்புகளில்லை 
எதுவித நம்பிக்கையுமில்லை
ஆகவே
ஏமாறாமல் வாக்குப் பதிவு செய்வர் 

அது காரணமாக 
வழமைபோல வாய்கிழிய பேசவோ 
வாக்குக்கேட்டுக் கும்பிடவோ வேண்டாம்.
வாக்குறுதி என்னும் வாக்கியங்களை அச்சடிக்கவோ 
அவசரப்பட்டு விதி எங்கும் வீசவோ  அவசியமில்லை

உங்களிடம் வாயிருக்க வேண்டியதில்லை
ஏனெனில்
நீங்கள் ஒன்றையும்பேசி சாதிக்கப்போவதில்லை
பேச்சும் எவரிடமும் எங்கும் எடுபடப்போவதுமில்லை 

அதனால் 
கைகளில் மட்டும் பலமிருந்தால் போதும் 
வேட்பு மனுக்களை தாக்கல் செய்யலாம்
அரசியல்/அரசு 
தலைவர்களுக்கு கும்பிடு போடலாம். 
கால்களில் விழுந்து கழுவியும் பிடித்து அமுக்கியும்  விடலாம்
சண்டித்தனம் செய்யவும் 
சக வேட்பாளரை அடித்து முறிக்கவும் முடியும்.

வெற்று அறிக்கைகளை எழுதலாம் 
வீரவசனசுவரொட்டிகளை ஓட்டலாம்
வேண்டியளவு கையூட்டுகளையும் வாங்கித் தொலையலாம்
கட்சி ஆதரவளர்களுடன் கைகுலுக்க நன்கொடைகளைப்பெற
கொந்தராத்து ஒப்பந்தங்களில் கையெழுத்திட
ஏழைகளுக்கு ஏதேனும் ஒதுக்கீடு வந்தால் எடுத்து
வீடுகளில் பதுக்க 

எப்போதாவது
வாக்களித்த மக்களை அனர்த்த நிலையங்களில் கண்டுவிட்டால் 
கையசைத்துக்காட்டவென

ஆதலால்
கையிருப்பவர்களெல்லாம் கவனிக்க
உடனடியாக
இம்முறை தேர்தலில் குதிக்கவும்.

 

விழியோடல்கள்