வெள்ளி, 14 நவம்பர், 2008

இருளும் உலகம்






இருளின் கைகள் வலியன போலும்
கூரையென அகல விரிகிறது.

சிரிக்கும் மனிதர்களின் உலகம்
இருள்கிறது.
சிவப்பாக மஞ்சளாக கறுப்பாக.

நெருப்பால் நீரால்
புகையாக இரத்தமாக
ஒளியின் வாலில் தொங்கியபடி
இருள்கிறது.

எல்லா மனிதர்களின் கைகளும்
குறண்டு போயிற்று.
யாரையும் யாராலும்
நிறுத்த முடியவில்லை.

எல்லோரின் முதுகெலும்புகளும்
முறிந்து நொருங்கிப் போயிற்று.
எவரையும் எவராலும்
சுமக்கவும் இயலாது போய்விட்டது.

சிரிக்கும் மனிதர்களின் உலகம்
சூனியமாகிறது.
ஜீவிதம் அர்த்தமற்றதாகிவிட்டது.

நீண்டு இசையும்
வாழ்க்கைப் பாடலில் குரல்
தழுதழுத்து முக்குகிறது.

மிஞ்சியிருக்கும் பாடலின்
ஒழுங்கற்ற வரிகளை சுமந்து கொண்டு
ஒவ்வொருவரும் தத்தம் வண்டிகளை
இழுத்துப் போகின்றனர்.

ஏழைகளின் வயிறுகளை அடகுவைத்து
நிர்மாணிக்கப்பட்ட
மைதானம் நோக்கி.

சிரிக்கும் மனிதர்களின் உலகம்
இருள்கிறது.
பச்சையாக நீலமாக சிவப்பாக சாம்பலாக.

அதோ!

தூரத்து நிலாவெறிப்பில்
அவர்களது நிழல் அவர்களுக்குள் ஒடுங்க
இராக்கால யாசகர்கள்

தமக்கான பாடலை
பாடிக்கொண்டு போகின்றார்கள்.

துர்சகுணங்கள் மிக்கதான இரவில்
அவர்களது குரல்
ஏதோவொரு அர்த்தமுடைய பாடலை
பாடுவதாக உளது.

தமக்கான தொனியுடன்
தமக்குகந்த சுதந்திரத்துடன்
இருளை விழித்து
நிலவை நோக்கிய பாடலை
பாடிக்கொண்டு போகின்றார்கள்.
அவர்களுக்கான உரிமையுடன்.

சிரிக்கும் மனிதர்களின் உலகம்
இருள்கிறது.
சிவப்பாக கறுப்பாக.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

விழியோடல்கள்