திங்கள், 10 நவம்பர், 2008

புலத்தில் வாழும் (சுதேச) நண்பனே


நம் தேசக்காற்றை
சுவாசிக்க ஏங்கும் தேசவிசுவாசியே.

சுதேசம் பறிக்கப்பட்ட
தேசத்தின் ஓரத்தில் நின்றபடி
உனக்கெழுதும் ஓலை இது.

உரிமை மறுக்கப்பட்ட தேசத்தில்
வசிப்பதால்
நான் நலமில்லை.
சம்பிரதாயத்துக்காக...
உன் நலமறிய ஆவல்.

நம் பள்ளி நாட்களில்
நம்மை சுமந்த
அத்தனை வீதிகளையும்
அன்று நமக்கு இனிப்புத் தந்த
அத்தனை தெருக்கடைகளையும்

இன்று
தொலைத்துவிட்டு நிற்கிறேன்.

அந்த இடத்தில்

இப்போதும்
நீயும் நானும் உண்ண விரும்பிடாத
தேன்குழல் இனிப்பு வடிவத்தில்
ஏதேதோ பெயர்ப் பலகைகளையே
பார்க்க முடிகிறது.

என்னை
அடையாளம் கண்டு கொள்ளாத
எத்தனையோ மனிதர்கள்.

எனக்குப் புரியாத
ஏதோவொரு மதலைப் பாசையை
பேசிக்கொண்டு.

என்னால் அடையாளப்படுத்த முடியாத
என் வீடும்
அயல்வீட்டுப் பிள்ளைகளும்.

அவர்கள் பார்வையில்
அன்னியன் தோரணையில் நான்.

நண்பனே...

என் தேசத்தில்
நானே அன்னியப்படுத்தப்படுகிறேன்.
விருந்தாளிகளால் விசாரிக்கப்பட்டேன்.

ஓர் நாள் நீ
என்னைத்தேடி நம் தேசம் வந்து
என் கல்லறையை தூசுதட்ட
மயானத்தையே தேடி அலையப்போகிறாய்.

நம் இனம் வாழ்ந்ததை
அடையாளம் காட்ட
நாளை அதுவும் மீதப்படப்போவதில்லை.

என் சுதேச விசுவாசியான நண்பனே...

நாளை நம்தேசம் தேடி
சமாதான நகரில் அலையாதே.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

விழியோடல்கள்