புதன், 29 அக்டோபர், 2008

எனக்குப் பிடித்த வில்லுக் குளமும் வெண் தாமரைப் பூக்களும்

நினைவிருக்கு.

முதலில் நீ சிரித்த
நம் ஊரின் மேட்டு வாய்க்கால் பாலம்.
தூரத்தில் சாட்சிக்கு
வெள்ளை நிறத்தில் கொக்குத் தங்கும் கல்.

எனக்குப் பிடித்த வில்லுக்குளம்.
அதில்
உனக்குப் பிடித்த வெண்தாமரைப் பூக்கள்.

அறிந்தேன்.
இப்போது எனக்கென்று நீயும்
வில்லுக்குளத்தில் தாமரையும் இல்லையென்று.

நீலச்சட்டை, குடைவெட்டுப் பாவாடை.
குடைமூடிப் போகும் கன்னச் சுழிவிழும் முகம்.
நெஞ்சைத் தடவும் ‘சுஜாதா’வின் புத்தகக் கட்டு.
இடுப்பு வரைக்கும் நீண்டு இருண்ட பின்னல்.

நீ தலை குனிந்து நடக்கும்
தார் போட்ட கணேஸ் வீதி.

அறிந்தேன்.
இப்போது நீ தலை குனிவதும்
நம் ஊர் வீதிகளில் தாரும் இல்லை என்று.

பகலிலும் துணைக்கு வரும் தங்கை.
பாவம்
இது ஏதும் அறிந்திராத உன் அம்மா.
என்றோ..
கடைசியாய் பார்த்த காளி கோயிலடி இத்திமரம்.

இப்போது
உனக்குள்ளும் காதல் இல்லை
ஊரில் கூட நாம் இல்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

விழியோடல்கள்