வியாழன், 23 அக்டோபர், 2008

நீ, அவளாய் இல்லை

மனம் முழுவதும் ஏதோ
ஆரவாரம்.

வாத்தியார் இல்லாத
வகுப்பறை போல

முண்ணான் சொல்ல
முகம் முழுவதும் சிரித்தேன்.

வகுப்பேற்றப்பட்ட
கடைசி மாணவனைப் போல

பத்து வருடம் கடந்து நீ
என்னைப் பார்த்தும்
கடந்து போகின்றாய்.

இன்னும் அதே
அழகுடன் உன் சோடி விழிகள்.

குழந்தைகள் பிய்த்து
கூந்தலின் நீளம் மட்டும்
கொஞ்சம் குறைந்திருக்கிறது.

எதிர்பார்த்தேன்.

நம் கண்களுக்கு நடுவே நீண்ட
ஒரு நிமிட தூரத்தில்

நீ ஒரு முறை
ஏனும் சிரித்திருக்கலாம்.

வேண்டாம்
ஒரு துளியேனும் அழுதிருக்கலாம்.

இல்லை...

எதிர்பார்த்தேன்.
நீ என் பக்கமாய் கடந்த
ஒரு நொடியில்

பத்து விரல்கள் வேண்டாம்.
அதில் ஐந்தையாவது
என் பக்கம் அசைத்துவிட்டுப்
போயிருக்கலாம்.

எதிர்பார்த்தேன்.
ஒன்பது வருடங்கள் உன்னுள்
ஒளிந்து கொண்டாலும்
கடைசியாய்
நீ என் கை தடவிப்போன

ஒரு நிமிடமாவது
உன் நினைவில் ஓடிவந்திருக்க வேண்டும்.

உடன்படுகிறேன்.
இன்னும் உன்னில் ஒட்டி
இருப்பதென்னவோ
எனக்குப் பிடித்த உன் முகம்.

இப்போது நீ அவளாய் இல்லை.
ம்... ம்...
அவளாய் நீ மட்டும் தான் இல்லை
‘திரு மதி’.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

விழியோடல்கள்