வியாழன், 23 அக்டோபர், 2008

நினைவுகள் தேடி

வாசல் பலாமரத்தில்
குயில் கூவி
உன் கனவு கலையும்

கண்ணைக்
கசக்கிக் கொண்டு
குளியல் அறைக்குள் நுழைய
உனக்காய்
முதல் முதல் எழுதிய
‘கவிதை’ வரிகள்
நினைவில் வரும்

காலை உணவிற்காக அமர
வழக்கம் போல
வட்டமாய்ச் சில
மஞ்சள் நிற தோசைகள்
உன் முகத்தை நினைவு படுத்த

மதியம் வரை
பழகிய பாதை வழியே
நூலகத்தில் என...

உன் வரவு தேடி நேரம் கரையும்
தோற்ற பின்
செக்கல் வரையும்
உன் நினைவில்
கவிதைகளுக்காக
துன்ப வரிகள் தேடி
பேனா மூக்கு ஒழுகும்

இப்படியே...
உன் ஞாபகத்துடன்
மாரடித்து
நாள் முழுவதும்
கக்கிசப்பட்டுக் கழிய

இரவு பத்து மணியாகி
‘இதயராகம்’ கேட்டு
மனம் தேறிப்
பின் மீண்டும்
உன் கனவுகளுடன் தான் உறக்கம்

வழக்கமாக வாசலில்
பலாமரத்தில் குயில் கூவி
உன் கனவு கலைக்க
உன் நினைவு தேடி
குளியல் அறைக்குள்
மீண்டும்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

விழியோடல்கள்