ஞாயிறு, 7 டிசம்பர், 2025

 ஒளி அளைந்த பகல் துயில்தலில் 

முடிவடையாத ஒன்றினுள்

நீண்டு பயணித்து


இருளில் மதி கலந்து

ஒளியில் நிலைக்கிறது 

இரவும் பகலும்.


ஒன்றில் தொடங்கி 

ஒன்றுடன் முடிகிறது நாட்காட்டி.


The dwindling day stretched

out into the endless


Madi mingles 

with darkness and rests in light

night and day.


Calendar starts with 

one and ends with one.

                                   

சுயம் எல்லை கடத்தல்

 

உழிகளில் ஆதியில் அழுத கடல் 

உப்பைத் தொலைத்திருந்தது.

என்னிடமிருந்த கொஞ்சத்தையும் கரைத்துவிட்டு வந்தேன்.

கூட்டத்தில் தொலைந்த மீன் நன்றி சொல்லிப் போனது.

நதிகளின் புணர்வாய் பிரவாகிக்கின்றது என் மீழெழல்.

கடல் மீதான நதியின் மீறல் 

சுகமான சுயமிழத்தல்.

இதில் கடலின் அதிகாரத்தை எங்கென்று  நிறுவுவது.

அது சிலபொழுது கரைமீறும் பொங்கிப் பூதமாகும் 

முந்தும் பெருங்கடலை புணரும் 

தனக்குள்ளும் அடங்கும் ஆறும்.

எனினும் ஆற்றுவாய் சப்புதலில் பொங்கி வழியும் நுரைகளைப் பூசி 

உயிர்க்கும் தக்கை மீன்களை வெண்புள்ளின் அலகில் கோதி பேரலை வீசியழித்து ஓயும்.

எறியபட்ட அலுமினிய ஏந்திகளை பொறுக்கியவனின் முகத்தில் போதையின் வண்ணம் அப்பித் ததும்ப

போதைத் திராவக ஆதிக்கம் 

சிலநொடி மூத்திரத் தெறிப்புடன் முற்றும். எனினும் வெற்றுத் திண்மங்களின் வேண்டுகை மற்றொரு திராவகத்துக்கான துமிவரை நீழும்.

ஏய் அலையே


அலைகளுக்கும் அழுகைகக்கும் நடுவே ஆச்சரியமும் தான்.

ஆண்டவன் பிரித்து வைத்த மனிதனை அலைகள் வந்து மனம் பிணைத்துச் சென்றன.

திக்கற்று நிர்க்கதியானவர்களைக் கண்போதும்

நெஞ்சடைப்பையும் தாண்டி நெஞ்சின் மூலையில் ஏதோ கொஞ்சம் நின்மதி.


எங்கள் குச்சி வீடுகளை குலைத்தெறிய முடிந்த உன்னால்

உறவுகள் எல்லாமாய் குழந்தையென்றும் பாராமல் 

வளர்ந்த நாய்க்குட்டியையும் விலக்காமல்

கும்பிட்ட கடவுளையும் சேர்த்து

குதறிப்போட முடிந்தது உன்னால்.

எங்கள் சொத்துகளைத் தின்று சோற்றுக்கின்றி 

அலைய விடவும் அலையே முடிந்தது உன்னால் தவிர..

இத்தனை நாளும் உன் அழகையே இரசித்த 

எங்களின் ஆடைகளை இழுத்து அம்மணமாய் ஓடவிடவும் முடிந்தது உன்னால்.


ஆனால் ஆனால்


பிணம் விழுங்க முடிந்த உன்னால்

மரணங்களை மலையாக குவிக்க முடிந்த உன்னால்

எங்கள் மனித நேயத்தை சிதறடிக்க முடிந்ததில்லையே.

மாடிகளை மதில் சுவர்களை இடித்து இழுத்துப் போட முடிந்தது உன்னால்

மனவுறுதியை உடைத்து அடித்துப் போக முடியவில்லையே.

உன் துரோகம் கூட எங்களுக்குள் துணிவையே தூவிப்போயிருக்கிறது.


அழுகிறோம் உண்மை ஆனால் துடைப்போம்.மீண்டும் எழுவோம்.

உன் முதுகில் மீனவன் படகேற்றி வலைவீசி

அலைக்கூந்தலுக்கு உச்சி பிரிப்போம்.

மீண்டும் உன் கரைக்கு வருவோம்.

கால் நனைப்போம்.


தெரியும். அப்போது..

எம்மைப் பொங்கி அழித்த 

உன் அலைக்குஞ்சுகள் புதிதாய் பிறப்பெடுத்து வந்து

எங்கள் கால்களில் நுரைப்பூக்கள் தூவி நிச்சயம் மண்டியிடும்.

.                                - சம்பூர் வதனரூபன்(2005)

(சுனாமி பேரலை அனர்த்தமும் அதன் தாக்கமும் மக்களின் வாழ்வியலை நிர்க்கதிக்குள்ளாக்கி மீள்ழெழல் நடந்த 2004/2006 காலப்பகுதியில் நான்  மட்/ஆசிரியர் கலாசாலையின் ஆசிரிய மாணவன். அக்காலத்தில் பாதிப்புக்குள்ளான ஆசிரிய நட்புகளதும் அவர்களது உறவுகளதும் துயரில்  பங்கெடுத்தும் பல்வேறு அனர்த்த மீட்பு நடவடிக்கைகளிலும் புனரமைப்பு செயற்பாடுகளிலும் பங்காற்றிய வலி நீங்கா நினைவுகள் பல உண்டு. அக்காலத்தில் ஆசிரியர் கலாசாலையின் 'கலைச்செல்வி- 2005' ஆண்டு நிறைவு மலரில் வெளிவந்த பதிவுக் கவிதையே இது.கவிதையின் போக்கு ,கனதி,நவீனம், வடிவம், உன்னதம் போன்ற சிலாகிபிற்கும் பரிசோதனைக்கும்  புறத்தே வலிகளுக்கும் உணர்வு வெளிப்பாட்டுக்குமான பதிவுப்பிரதியாக மட்டும் கொள்ளலாம்)

அன்பில் தோய்ந்த அந்தச் சொல்லை

இதயப்பையுள் போட்டுவிட்டு 

ஓய்கிறாய்.


அதிகாரமற்ற 

அரை நிர்வாணச் சொல்லொன்றின் ஆழ்தலில் 

மய்யத்துள் உயிர்த்தது 

ஓர் உறவின் பெயர்.


You put that love-filled word 

in your heart bag and rest.


In the depths of 

a powerless half-naked word

the name of a relationship arose 

in the center.

மூடுபனியுள் தொலைந்த நகரில் 

இரவும் பகலும் சுயமிழந்த பொழுதொன்றில்

நீ நானாய் இருக்கிறாய்.


சூறைமழையின் ஈரப்பிசுபிசுப்பில்

கூதல் குருவிகளின் காதல் கழிவுகளை தேடிப்பொறுக்கிச் சுமந்து 

எறும்புகள் பதுக்குகின்றன.


பேரூந்தின் சாளரங்களூடே 

பின்னோடும் மரங்களைப் போல் 

நெருக்குவாரச் சாலையில்

வெள்ளைப் பன்றியென

சலனமேதுமின்றி கடக்கிறாய்

விதி.


நீ அறுபட்டிருக்கும் இந்நாட்களில்

வேறுவித மனநிலை

உளத்தல் இரவோடும் உளைச்சல் மனதோடு

நினைவு தப்பத் தப்ப உலாத்துகிறேன்

நீ பத்திரம்.


நீ உன்னோடு மட்டும் உயிர்க்கிறாய்.

உனது இருத்தல் அசாத்திமானதும் ஆர்ப்பரிப்பற்றதும்

ஆயினும்

குழுவாசிகளை குழப்பமடைய செய்வதாயிருக்கிறது

போகட்டும்.


இப்பன்றிமய்ய வாழ்தலில்

முடிந்தவரை உனதையும் நிறுவு.


Day and night lost in the city

lost in the fog

In a moment you are me.


Ants lurk 

in the wetness of monsoon rains 

carrying sparrows' love waste.


Like the trees 

behind the bus windows

You cross the narrow road 

like a white pig 

without temptation. 

fate.


In these days when you are cut,

I in a different mood

with a troubled mind at night

I wander to escape the memories.

you bond.


You live only with yourself. 

Your presence is impenetrable and 

unappealing.

However


To confuse the group members

is doing.

Let it go.


Establish yours 

as much as possible 

in this knowledge.

                                     -சம்பூர் வதனரூபன்

முட்டாள்களின் அன்பு



என்னுள் ஆழ அமிழ்ந்திருந்த நீ

மெதுவாக மிதந்து மேலெழுகிறாய்.

பரவாயில்லை தப்பித்துப் போ.


புத்திசாலித்தனமான முட்டாள் தனங்களைப் புரிதல் கடினம்.


இந்த பைத்தியக்காரத்தனமான அன்பு என்ன தான் செய்தது. 

தவறுகளை புரிந்துகொள்ள முடியாத முட்டாள் ஆக்கியதைத் தவிர  


நீயே வாழ்வென இருந்தாய்.

நானுன் வாழ்வில் இருக்கிறேன்.

தவிர

இன்னும் உன்னைக் கவர 

என்னில் என்ன மிச்சம் ஒட்டியிருக்கிறது.


நீ சினந்து உமிழ்ந்த வெறுப்பின் அருவருப்பைத் தவிர 

கலங்கிய என் கண்களில் மங்கித் தெளியும் உன் வட்ட முகத்தைத் தவிர


எண்ணங்களில் காய்ந்து போன எதிர்பார்ப்புகளும்

நீ உடைத்த ஒரு துண்டுக் கனவையும்  தவிர

துளி நகைச்சுவையும் 

நொடிளவு வெறுமையும் இல்லாத என்னிடம் 

என்ன இருக்கிறது உன்னிடம் பேச.


விழி பிதுக்கும்

 உன் ஒவ்வொரு வினாவிலும் 

விடை  அறியத் தோற்கிறேன்.

ஒவ்வொரு தடவையும் நீயே வென்று என்னை இழக்கிறாய்.


என்னை நீயும் உன்னை நானும் இழப்பதைத் தவிர

இந்த பைத்தியக்கார தனமான அன்பு என்ன செய்தது. 

அதிபுத்திசாலியை முட்டாள் ஆக்கியதை தவிர


புரிதலின்றிப் போனது பற்றி புரிய முடிந்தது

புரிவது பற்றியே புரியாதுள்ளது.

நீ என்னை இழக்கிறாய்.      

11/06/2025

 சலவைத்துணியான உறவு

கறைகளை அகற்ற போக

காதல் சாயம் போயிற்று.


04/08/2025

இரவொன்றின் அடர்த்தியையும்

உன்னையும் புரிந்துகொள்ள..

மற்றொரு இரவும் பகலொன்றும்

கூடவே 

சிறுதுளி மழை.. ஒரு துண்டுக் கனவு..

நீ இல்லாத இன்றும் வேண்டும்.


08/08/2025

புரிதல்

 

கரடுமுரடான என்னில் ஒன்றை கரைத்து 

ஓய்வு தேநீர் இடைவெளி முழுவதும் குடித்தோய்வதானது உன் அன்பெனினும்..


புரிந்து பின் அதில் மீதி மண்டிமண் வழித்து மீண்டும் கல்லாய் இறுக முயல்வதானது என் சிலபொழுது மௌனம்..உணர்.


நீ.. ருசிப்பதாக சிறுக சிறுக நொறுக்குவதான தீனி 

என் உணர்வுகளின் சுருள் முறுக்கொன்று என்பதாம்.


கட்டியெழுப்ப முடியாது தோற்றோ கைவிட்டோ கிடக்குமொரு கல்லடுக்கின் இடைகளை இறுக நிரப்பும் கலவையான உறவொன்றின் பிணைப்பு.

உருப்பெறுமா? பாசிபரவ பாழடையுமா?


குறிவிறைத்த கனவொன்றை கலைத்த சிறுநீர் முடுக்குப் போல

உன் மனவோட்டங்களால் அடித்தோடி தொலையுமோ

வியர்ப்பு பொழுதில் வீசி 

சிறு காற்றாய் ஓய்வு ஒழிமோ


அவ்வவ் கர்வம் வெல்ல அதுவரை சேமித்த காதல் மொழிகள் கொலையுறுமோ ?

மரணம் தொடும் முன் 

மனிதவுடல் உணர்வறும் நிலைவரை 

மன்னிப்புகள் நிறைவுறுமோ?


இந்த உறவில் சுதந்திரம்  என்ன?

தெருவில் புணர்ந்து மகிழ்ந்திருக்கும் நாய்களை   

இழுத்து விலக்கி விரட்டுவதான 

எல்லை மீறலா?

முகிழ்ந்து முகிழ்ந்து சிதையும் நீர்க்குமிழி சந்தோசங்களா?


அப்படியானால் 

உன் சிலுவைக் கம்புகளை

நீயே சுமப்பதாக ஒப்புக்கொள்.


31/05/2025

நினைவிழத்தல்

 

இன்றைய காலை என்னை

சில துளிக் கண்ணீருடன் எழுப்பியது.

மனிதர்கள் இலகுவில் மறக்கக்கூடியவர்கள்.


என்னை மிகவும் நேசித்த 

என் பாட்டி  

நினைவை இழந்திருந்தாள்.

நான் இன்னும் அறியாது

வேறு சிலரும் இருக்கலாம்.


சுயமிழத்தல் மிக கொடுமையானது

அதுவொரு நிர்வாண மனதிற்கான சாட்சி. 

காலம் மிகவும் சுதந்திரமானது.

தன்னை அதுவே தீர்மானிக்கிறது.


13/08/2025.   5.23am

உனக்கொரு நிலவை பரிசளிப்பதற்கு

வசதியாய் 

என்னிடம் வானம் ஏதொன்றுமில்லை. ஆயினும்

உன் ஈர நினைவுகளைச் சுமந்தலையும் ஏழை ஆன்மாவொன்று எப்போதும் என்னிடம் உண்டு.

03.09.2025.10.04 Pm

பருவகாலப் பறவைகளே!

புயல் சாய்த்துப்போன மரத்தை நோகாதீர்கள்.

அதன்

சாய்வுகளை விரும்ப 

உங்கள் மனம் மறுக்குமாயின்


தேடுங்கள்! 

நிமிர்ந்த மரங்கள்   

இன்னும் நிறைய முளைத்திருக்கும்.


சம்பூர்வதனரூபன்

02/11/2025, 11:02 am]

மதிப்பிழத்தல்

 

உனக்கான பேரன்பு 

பெருக்கெடுக்கும் போது

ஊமையின் பலவீனமான உடல்மொழி

வலுவிழந்து தான் போயிற்று.


உரிமையற்ற உறவில் 

பயனற்ற உணர்வுகள் மதிப்பிழத்தல் 

மிகச் சாதாரணமானது.


எனக்காக நீ இல்லை. என்பதை

நான் உணர்வது போல

நீயும் உணரும் வரை

நான் உன்னோடு தான் இருப்பேன்.


சம்பூர் வதனரூபன்

[01/11/2025, 6:58 pm]

 நம்பிக்கையை எடுத்து வா.

மௌனத்தை அடித்து உடை.

மொழியைச் சிதறவிடு.

அடம்பிடி.

தேவைகளை உணர்த்து.

உன் தடவைக்காக காத்திரு.

தடைகளை எத்தி உதை.

உனக்கானவைகளைப் பறித்தெடு.

நீயும் வெல்.

04/11/2025

 சினேகப்பறவையொன்று

தன் கூட்டிற்கே திரும்பியது

இறக்கைகளை இழந்து.


இறக்கை அற்றதும் வாழ்வெனினும்

இறக்கைகள் என்பது வாழ்வாதாரம் 

சுதந்திரக் குறியீடு

விட்டாத்தி உணர்வின் அடையாளம்.

அடைப்பற்ற மகிழ்ச்சி வெளி.


கனவுகள் மெய்படும் போது

அதுவரை உடனிருந்த சில நனவுகள்

பழைய நினைவுகளாக மாறிவிடுகின்றன.


[11/11/2025, 5:10 pm]

சம்பூர் வதனரூபன்

யுத்தகாலச் சொற்கள்

சிதைந்த கனவொன்றை முடிக்க 

காப்பரண் திட்டுகளிலும்  இடற

நொறுக்கிய தேங்காய்ச் சில்லுகளும்

வறுத்த சீனிமா முடிச்சும் 

கன்வஸ் கூடாரமும் 

கனவுகளில் வந்து கண்கள் கசிந்தன.


இதுவரை நினைவில் தொலைந்திருந்த 

செல் அடிக்கு பாதியாய் மடிந்து 

மனதை பதறவிட்ட மணி மாமியும் 

ஊரை விட்டு ஓடுகையில்

பாதையின் குறுக்கே சிதறிக்கிடந்த 

யாரோ சிறுவனும் தாயும் 

கனவின்  வந்து  சித்திரவதை செய்ய

விழித்தேன்.


யுத்தகாலச் சொற்களை 

மீண்டும் நினைவின் தளத்தில் 

குவிக்க தொடங்குமோ காலம்.


[14/11/2025, 10:09 pm]

சம்பூர் வதனரூபன்

இழப்புகளின் மாதம்

 

கார்த்திகை போராட்டம் நிறைந்தது .

போர்க்குணம் மிக்க 

இந்த நாட்களில் போராடுவதே 

வாழ்வின் நியதி என்றாகியது  .


இந்தப் பருவமழை 

இவ்வளவு அழுதிருக்கக் கூடாது.

மண் மலைகளைக் கரைத்து 

மனித உடல்களை குவித்திருக்கிறது.


நீரைப் பெருக்கி

முழு நிலத்தையும் விழுங்கியது.

பருவம் பொய்த்த மழைக்கு

பாவி என்று பெயர் வைத்தார்கள். 

ஏழை வாழ்வை நிர்க்கதியாக்கி ஓய்ந்தது. 


வெயிலுக்கு இல்லாத வல்லமையோடு

வீசும் காற்றில் மோதி 

வலி உணர்த்தி  மனிதம் சிதைத்து 

கிழித்த வடுக்களோடு

இயற்கை மல்லுக்கட்டி நிற்கிறது.


இயல்பில் இதம் தந்த பூதங்களும்

பழி தீர்க்கும் பகையோடு அழித்தன.

காலம் மீழ்வதற்கு ஏற்ப நெகிழ்வானது.


(30/11/2025.  10.12 pm)

சம்பூர் வதனரூபன்

வாழ்க்கையின் போராட்டம் 

சிலருக்கு வாழ்வதற்கானதாகவும்

சிலருக்கு மீள்வதற்கானதாகவும் 

கடந்து போகின்றது.


(01/12/2025.  05.24 am)

சம்பூர் வதனரூபன்

கறை நல்லது


நிச்சயப்படுத்த முடிந்திராத பல காட்சிப்பிழைகளுக்குள் இருந்து

மிக நிதானமாக

உனக்கான அற்புதங்களை தேர்ந்தெடுத்துக்கொண்டுள்ளாய்.


இழக்கப்பட்ட அண்மைகளில் 

நகர்ந்து போன 

அத்தனை தருணங்களையும் 

நீ கைவிட்டுப் போன 

வெறுமை தோய்ந்த நாட்களின் 

தனிமையில் உணர்ந்தேன்.


நீ முழுவதுமாக  கரைந்து போய்விட்ட மனதில்

இன்னும் ஏனோ 

உன் சாயல் நினைவுகள்

சலவைக்கும் மங்காத 

காய்ந்த கறைகளைப் போல

அப்பிக் கிடக்கின்றன.


நான் எதுவாகிப் போயிருக்கின்றேன்.

உன்னை எவ்வாறாக உணர்கின்றேன்.

என்பதெல்லாம் இனி 

உனக்கும் அவசியமற்றவைகளாயின.


[01/11/2025, 5:28 pm]

சம்பூர் வதனரூபன்

 பெருங்கடலும் குப்பைகளை கரையொதுக்கி விடுகிறது.

கடலளவு மனது.


03/12/2025, 5:08 am]

சம்பூர் வதனரூபன்

அதிகாலையின்

இரண்டாம் மிடர் தேநீருடன் 

தொண்டையில் சிக்கிக்கொண்டாய்.

முதல் மிடர் கண்களில் வழிய.


(02/12/2025,   02:47 pm)

மனிதர்களாகவும் வாழ்கிறோம்



இருள் கவிந்த துர்சகுனங்கள் 

உணர்த்திய

இன்றைய முன்னிரவில்


அவளன்றிப் போனாலும்

நெடுநாள் கழிந்து 

முழுநிலவைக் காணமுடிகிறது.


தட்டையென ஏமாற்றும் இயல்பற்ற 

அதன் வட்ட முகத்தை

சிறு புன்னகையோடு 

இன்று எதிர்க்க முடிந்தது.


அருகே 

ஒளி மங்கிய ஒரு நட்சத்திரம் 

துடித்ததும் . 

நினைவுகளால் ஆன மேகவலை படர்ந்ததையும்

என் மனநிலையென 

ஏற்க முடியவுமில்லை.


மனிதர்கள் சுயநலம் மிக்கவர்கள்.

மனிதர்களாகவும்

மனிதர்கள் உள்ளுமே வாழ்கிறோம்.


[03/12/2025,    8:56 pm]

அமுதநீர்








இலையுதிர் காலமென முகில்கள் சொரிய

இன்றைய நாளில்

வானம் வெறிச்சோடிக் கிடக்கிறது.


வெயில் ஈரமானதைச் சுட்டெரிக்கிறது.

அளவுக்கு மீறிய அமுதநீர் நிலமெங்கும் 

நஞ்சாகித் தெகிட்டித் தேங்கிக்கிடக்கிறது.


பலருக்கு

இருந்த வாழ்க்கையும் 

சிலருக்கு மனிதர்களும் இன்றில்லை.

காலமும் இடங்களும் காரணங்களும்

 பொதுவில் வேறுபட்டாலும் 

அவல வாழ்வுநிலை மாறிவிடவில்லை.


நாட்கள் சில நகர 

வெள்ளநீர் வடிந்தோடிப் போகும்.

கண்களில் ஈரம் காய்ந்தும் விடும்.

தேக்கமெங்கும் கடலிலும் 

மீன்கள் சிக்கிட  நாரைகள் குவியும்.


கடைத்தெரு சன நெரிசலாகும்.

வாகனம் இழந்தவர் காப்புறுதியால் மீள்வர்.

வீதிகள் இரைந்து 

விபத்துகளும் இயல்பாகும்.


பகிர்ந்த உலர் உணவுகளும் தீர்ந்துவிடும்.

பசித்த வயிற்றை அமிலம் தின்னும்.

பள்ளி தொடங்கி

 பை,பொத்தகம்,சட்டை,,சப்பாத்தென்று

 தேடுவார்கள்.

தொழில்கள் ஒழிந்திருக்கும்.


விதியென

வாழ்நாள் வெறுமையோடு கழியும்.

காலம் எளிமையானவர்களையும்

 ஏழைகளையுமே மீள மீள வதைக்கிறது.


[02/12/2025,08:47am]


சம்பூர் வதனரூபன்


பறவையின் நிழல்

 








வானை கடந்து செல்ல முயற்சிக்கும்

பறவையின் நிழல்

முகத்தில் அறைகிறது.

 

தலைக்கு மேலிருந்த காகம்

அதன் அழுகையை

எனக்காக விடுச்சென்றது.

 

பூங்காவின் நடைபாதையில்

காலடிகளின் ஆயுளை எண்ணுகிறேன்.


நினைவு தப்பித் தப்பி

இப்பொழுதுகளில் 

நீ வந்து போகிறாய்.

 

மறக்கப்படுதல் சுலபமானது என்பதை 

பொங்கிய கடலலையின் 

இன்றைய அமைதி அறிவிக்கிறது.

 

இப்போது காதல் என்ற சாக்கில் 

கவிதைகளையெல்லாம் 

பறிகொடுப்பது வழக்கமாகி விடுகிறது.


[04/12/2025, 10:41 am]

 சம்பூர் வதனரூபன்

siraippu.blogspot.com

அன்பு எனும் சொல்

தொலைந்த வீதிகளின் 

நிழல் மரங்களில்

தொங்கிக் கிடக்கிறது ஆன்மா.


சாலையோரத்து 

சீமேந்து நாற்காலிகளின் ஆதரவிலும்

காலை நக்கும் தெருநாய்க்குட்டியின்

கருணையிலும் தோற்றது .


அன்பு எனும் எல்லாச் சொல்லும் உணர்வுகளும்.

[04/12/2025, 11:39 am]

 







அந்தரித்த சிலந்தி ஒன்று.

தன்னைத் துப்பியும் 

தன்னைத் தானே விழுங்கியும்

சட்டெனத் தொங்கி 

விழாதபடி விழுந்து

நீட்டியிருந்த எனது

ஒற்றை விரலைப் பற்றிக்கொண்டது.

கைகளின் எல்லைக்குள்ளிருந்து 

மீற முடியாமல் 

ஓடி ஓடி அலைந்து

தொடர் அறுந்திடாமல் இருக்க

தன்னை இழந்து இழந்து 

வலை பின்னிக்கொண்டே 

கையைச் சிறைப்பிடித்தது.

முடிவில் அதன் வாழ்வெளி முழுவதும் 

கைக்குள்ளே சிக்கிக்கொண்டது

 

சம்பூர் வதனரூபன்

[05/11/2025, 5:12 pm]

https://siraippu.blogspot.com



நினைவில் தொலைதல்














சொல்லாமல் போகிறவர்களை விட்டுவிடுங்கள்.

பகிர முடியாத வலிகளை இழுத்துக்கொண்டு போகிறவர்கள்

கனவுகளாலும் கற்பனைகளாலும் ஏமாற்றபட்டிருப்பார்கள்.

நிறுத்தி

பரிதாபங்களால் 

மேலும் வதைத்துவிடாதீர்கள்.

போகட்டும்.

வாழ்வின் இயல்பை புரிந்துகொண்டு

மீள வழிதேடி அலையட்டும்.

காலச் சுழற்சியில் வலிகள் உதிரும்.

முடிந்தால் நினைவுகளை 

இழக்கச் சாபமிடுங்கள்.

யாருமற்றிருப்பதாக உணர்கையில்

உடன் எவரேனும் தேவைப்படுகிறார்.

எல்லாம் இருக்கும் போது

எவரையும் நினைக்கத் தோணுவதில்லை.

மூர்க்கமான பிரிவின் அதிர்வுகள் உணரப்படுவதில்லை.

மௌனமான விலகுதல்

பெருவலி மயமானது.


[ 05/12/2025, 4:16 am]

சம்பூர் வதனரூபன்


இப்போது எல்லாமும் மாறிவிட்டது.


 








இப்போது எல்லாமும் மாறிவிட்டது.

கண்களில் படிந்திருந்த தேவதையின் வடிவு.

மௌனத்தில் பதறும் மனோநிலை.

கைகோர்த்து நடக்கும் கற்பனை.

வாழ எண்ணிய கனவு நாட்கள்.

ஓயாது பேசி மகிழும் ஓய்விடம் .

சிரிப்பொலி கேட்டு பொலிந்திருந்த முகம்.

இப்போது எல்லாமும் மாறியிருக்கின்றன.

 

உயிராகிப் போயிருந்த அற்புதம்.

நேசிப்பதற்கான

நிகழ்தல்களின் ஆச்சரியம்.

பிரிந்தால்

சாவதாகச் சொன்ன சத்தியம்.

தனித்துவிட்டாய் என்று அழுத பொய்.

விலகிவிடமாட்டோம் என்றிருந்த நம்பிக்கை.

எல்லாமும் மாறிவிட்டது.

 

உன்னில் சுமப்பாய் என்ற உள்ளுணர்வு.

ஆயுள் நிறைவுறும் வரை நீளூம் இவ்வுறவென்ற வீறாப்பு.

காதை நிரப்பும் முழுநாள் தகவல்.

காத்திருந்து சோர்வடைத்த சில மாலைப்பொழுதுகள்.

ஆசைகள் உணர்வுறுத்தும் சிலிர்ப்புகள்.

 

உணவை நினைவூட்டும் குறுஞ்செய்தி .

வேலை நேரத்தில் குறுக்கிடும் அழைப்பொலிகள்.

உறங்க வைக்கும் இரவு வணக்கம்.

இழப்பின் கவலைகளை கரைத்து

அவ்வப்போது ஒழுகும் நீர்த்துளிகள்.

 

அத்தனையும் காலச்சுழற்சியில்

காணாமல் ஆக்கப்பட்வைகளாயின.

இப்போது எல்லாமுமே மாறியிருக்கின்றன.

 

(06/12/2025. 07:48 pm)

சம்பூர் வதனரூபன்

 

 

விழியோடல்கள்