திங்கள், 15 டிசம்பர், 2008

நிலைத்துவிட்ட எழுத்துக்காரன்

நாங்கள்
தொல்லையென்றவன் தொலைந்ததும்
தொடரெழுதி அழுபவர்கள்.

வாழும்போது வாழ்த்தாமல்
அவனது கையெழுத்துப் பிரதிகளை
கசக்கியெறிந்து காறித்துப்புபவர்கள்.

அவனது எழுத்துக்களுக்குள்
எந்தப் பொருளுமில்லையென்று
எழுத்தாணிகளை முறிக்கத்
திட்டம் போடுபவர்கள்.

அவன் கருத்துக்களுக்கு
மாற்றீடாக வேறொன்றை ஏந்தி
மறுதலித்து நிற்பவர்கள்.

இன்று
சாவு வந்ததும்
அவனுக்காக
இரங்கலுடன் குமைதலொன்றும்
இதழொன்றில் நினைத்தல் தொடரொன்றும்
எழுதவென்று முடிவெடுத்துள்ளோம்.

இன்று அவன்
எங்களுக்குள்
நிலைத்துவிட்ட பெயரெழுத்துக்காரன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

விழியோடல்கள்