செவ்வாய், 16 டிசம்பர், 2008

விரட்டப்படும் அப்பாவிகளும் மீட்பர்களும்


கேளுங்கள் கிறீஸ்துவே!

உமக்குப் பின்னரும்
மீட்பர்கள் எனச் சொல்லி
யூதாஸ்கள் ஒன்றுகூடி வருகி்றார்கள்.

விரட்டவல்ல ஏவலாளிகளிடம்
கொம்புகளையும் சாட்டைகளையும்
அவர்களே ஏற்பாடு செய்தார்கள்.

முன்னர் ஒருபோதும் இல்லாதவாறு
மந்தைகள்போல
திசை முழுவதும் விரட்டப்பட்டவர்களிடம்
தங்களின் பாவங்களையும்
சுமக்கத் தருகிறார்கள்.

ஒவ்வொரு தொலைவுக்குப் பின்னாகவும்
தேடிப் பொறுக்கப்படும்
அழுகல்களின் உள்ளிருந்து
முள் முடிகளோடு உருவியெடுக்கப்படும்
எலும்புகளால்
சிலுவைகளை செய்து தருகிறார்கள்.

ஒவ்வொரு பலியின் போதும்
அப்பாவிகளின் தசைகளையே, ரத்தத்தையே
உண்கிறார்கள். குடிக்கிறார்கள்.

வெளி முழுவதும் குவிக்கப்படும்
அப்பாவிகளின்
மண்டை ஓடுகளை நோக்கி
கல்வாரிகள் இதுவென கை நீட்டுகிறார்கள்.

அவர்களின் உயிர்ப்பிற்காக
மீண்டும் மீண்டும் அப்பாவிகளே
மரிக்கவேண்டியதாயுளது.

இப்போது சொல்லுங்கள் !
வழி தவறிய இந்த ஏய்ப்பர்களா
மீட்பர்களும் நல்ல வழிகாட்டிகளும்?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

விழியோடல்கள்