திங்கள், 15 நவம்பர், 2010

முகம் மாறி மாறி வந்த அசூரர்கள்

   01
அப்பாவிகளை வதைக்கும் அசூரர்களை
அவதரித்துக் கொல்லும் கடவுளர்கள் எங்களது.
நூற்றாண்டுகள் முன்பிருந்து
அசூரர்கள் முகம் மாறி மாறி வருவர்.
அம்மனாகியும் முருகனாகியும் சிவனாயும்
திருமாலாய் கணபதியாய் கடவுளர் உருவெறிக் கொல்வர்.

ஆன பின்னும்..

யுகம் யுகமாய் அசூரர்கள் வருவர் அப்பாவிகளை வருத்துவர்.
கடவுளர் அவதரிப்பர் கொல்லுவர்.
மீண்டும் மீண்டும் அசூரர்கள் வருவர்.
கடவுளர் அவதரிக்க..கொல்ல...

 02
புத்தியறிந்த முப்பது வருடங்களில்
ஆண்டுதோறும் அசூரர் பலர் வந்தனர்.
முகம் மாறி மாறி
சிங்க முகத்தோடும் யானை முகத்தோடும்
கடா முகத்தோடுமென

எதிர்த்துப் போரிட முருகர்கள் வந்தனர்.
அசூரரைக் கொன்றனர்.
முருகர்களை வெல்லமுடியதென அசூரர்கள் பயந்தொதுங்கினர்.
அசூரர்களின் துன்பத்திலிருந்து
நின்மதி வருமென அப்பாவிகள் காத்திருந்தனர்.

மீண்டும் மீண்டும்
அசூரர்கள் போரிட வந்தனர்.
முருகர்கள் உருவேறிப் பாய்ந்து 
விரட்டி விரட்டி கொன்றனர்.
முருகர்கள் நினைத்தனர்
அசூரர்கள் எப்போதும்
சிங்க முகத்தோடும் யானை முகத்தோடும்
கடா முகத்தோடுமே வருவர் என்று.
  
03
இம்முறை அசூரர்கள்
சிங்க முகத்தோடும் யானை முகத்தோடும்
கடா முகத்தோடு மட்டுமின்றி...
நரியின் குள்ள முகத்தோடும்
ஒட்டகம்,பசுவின் கருணை முகத்தோடும்
ஓநாயின் விசன முகத்தோடும்
நடு நடுவே
கடவுளர்களின் அகோர முகத்தோடுமென..
ஒரு தொகை முகங்கொண்டிணைந்து
எட்டுத் திக்குகளிலுமிருந்து
நவீன வாகனங்களில் ஜாலம் காட்டி .
பலமாகவலியவர்களாக வரம் பெற்று போரிட வந்தனர்.
கடவுளர்களில் பலரும்
அசூரர் பலம் பெற வரமளித்தபடியுமிருந்தனர்.

மாறாக                                                                 
முருகர்களினது புராதனமான மரபுகளோடிருந்தன.
பரிவாரங்களை நம்பிய முருகர்கள்
மயிலையும் சேவலையும் வேலையும்
கொடியையுமே..இழக்கவேண்டியதாயிற்று.
  
04
இம்முறை
கடவுளர்களை படைத்த எல்லோருமாக
அசூரர்களிடம் முருகர்களை தோற்றோம்.
மாங்காய்களை பறித்துத் தின்றும்
இலைகளை காதில் சூடியும்
திருப்திப்பட்டுக் கொண்டோம்.

இனி..
முருகர்கள் போரிட வராது விடினும்
அப்பாவிகளை வதைக்கவென அசூரர்கள் வருவர்.
ஆண்டுதோறும்
சிங்க முகத்தோடும் யானை முகத்தோடும் கடா முகத்தோடும்
மாறி மாறி...முகம் மாறி மாறி.

1 கருத்து:

 

விழியோடல்கள்