திங்கள், 27 செப்டம்பர், 2010

புத்தனின் பெயரால் கொல்லப்பட்ட மரங்கள்


ஏழு வருடங்களாய் அந்த பெரிய மரத்தை எனக்குத் தெரியும்.

பள்ளிக்கூட மூலை வளவில்
பருத்த கிளைகளை வீசியெறிந்து
காகமும் கொக்கும் கூடு கட்டிக் கூச்சலிட
கறுப்பு நிழல் பரப்பி வெள்ளை எச்சங்கள் பூசி
ஆண்டுகள் தோறும் ஆயிரங்களாய் காய்த்துக் கொட்டி
அதற்கான உரிமையோடு பல்லாண்டுகளாயது
தன் பாட்டில் வாழ்ந்த மரம்.

ஓர்நாள் அதை
அவசரமாகக் கொன்றார்கள்.
ஓரிலையும் ஓர் துண்டுமில்லாமல் வெட்டியெறிந்து
அடையாளம் தெரியாதிருக்க
தொலைதூரம் கொண்டு வீசிவிட்டு வந்தார்கள்.

விளக்கம் கேட்டவர்களுக்கெல்லாம்
'அதில முனி இருக்கு.. சாமத்தில விளக்கெரிக்குது..
புள்ளயள் கேட்குது.. குமருகள ஆட்டுது..” என்றெல்லாம்
குற்றஞ்சொல்லிப் போனார்கள்.
முனியைக் கொல்ல முடியாமல் மரத்தை மட்டும் கொன்றார்கள்.

நானும் கூடக் கேட்டிருந்தேன்.

ஊரவர்கள் சொன்னார்கள்
அந்த மரக்காட்டுப் பக்கம் ஆறு மணிக்கு மேலாக
துர்நாற்றம் காற்றில் வீசும்.
கருப்பு நிறத்தினிலும் விரித்த முடியோடும்
அம்மணமாய்ப் பெண்கள் அங்குமிங்கும் திரிவார்கள்.
ஆணும் பெண்ணும் கலந்தாற் போல் முனகல் சத்தம் கேட்கும்.
குப்பி விளக்கு நகரும்... சில நேரம் பெரிதாக அடுப்பெரியும்.
அந்தப் பக்கம் போவோரை கூச்சலிட்டு விரட்டிவரும்.
வெள்ளி செவ்வாய் நாள் வந்தால்
முனியின் வெறியாட்டம் கூடிவிடுமென்றும்.

உண்மையொன்று அதுபற்றி ஊகமாக மட்டுமுண்டு.

காட்டுப்புற மறைவுகளில் கள்ளக் கலவி முனகல்களும்
நிர்வாணம் மூடாமல் புணர்தலையும் பெண்களும்
முனிகளாகத் திரிகிறார்கள்.
கசிப்பு வடிக்கும் அடுப்பும்
அதன் கழிவுகளின் அழுகல் நாற்றமும்
அவர்கள் காவும் குப்பி விளக்கும்
முனியின் வேலையென்று நம்பி..
முடிவில் அரசமரத்தை பலிகொடுத்தார்கள்.

அடிவயிற்றைப் பிடித்தது போல்
ஆச்சியொருத்தி இப்படியும் சொன்னாள்.

"முன்னயும் இப்பிடி மரம் முச்சந்தியில நிண்டது..
பிக்கு வாறான்.. பாத்துப் போறான் எண்டு
பின்ன.. ராவுராவா ஆத்தில வெட்டியெறிஞ்சிற்றம்..
நேத்தும்
இந்த மரப்பக்கம் நாலு மொட்டையனுகள் சுத்திப் பாத்தத
ஆரோ கண்டு...
பொறவு
புத்தரக் கொண்டு வச்சாலுமெண்டு
ஒடனே வெட்டிப் போயிட்டானுவள்..”

இது என்ன புதுக்கதை.

பெருத்த நிழல் தருகின்றதென்று புத்தர் கீழே குந்தினாரோ..
வேறு மரம் கிடைக்காமல் அரசின் கீழே அமர்ந்தாரோ..
 புத்தரிருக்க புண்ணியம் செய்த மரம்
பாவம்..
தமிழன் பூமியில் அச்சுறுத்தலுக்கானது.

இந்த மரம் வாழ்வதற்கு எந்த சுதந்திரமும் இல்லைதானா?

பிள்ளையார் வைத்தார்கள் என்று
இனி எவரும்
வேம்புகளையும் வெட்டி எறிவார்கள்
.

2 கருத்துகள்:

  1. இது என்ன புதுக்கதை.

    சம்பூர், கிளிவெட்டி, சேனையூர் என்ன திருகோணமலையின் பகுதியிலேயிருந்து இது என்ன புதுக்கதை என்பதுதான் எனக்குப் புதுக்கதை....

    ஒருவேளை இடதுசாரியென்றால், இப்படித்தான் சொல்லவேண்டுமோ தெரியவில்லை

    பதிலளிநீக்கு
  2. அந்த மரத்திற்கு எல்லாச் சுதந்திரமும் உண்டு நம்மைப்போல் வாழ்வதற்கு...
    அந்த மரத்திற்கு மட்டுமன்றி இவ்வுலகிலுள்ள எல்லாப் படைப்புகளுக்கும் அது உண்டு...
    ஒரு உயிரின் சுதந்திரத்தை வேரோர் உயிர் எச்சந்தர்ப்பத்திலும் பறிப்பதில்லை...
    மனிதர்கள் மட்டுமே அதற்கு விதிவிலக்கு...
    எதையும் யாரிடத்திலிருந்தும் பறிக்கலாம் என நினைப்பதுடன் அவ்வாறே வாழ்ந்தும் வருகிறான்...
    நீ சொல்வதுபோல வேம்புக்கும் வேட்டுத்தான்...
    இன்னும் சில காலங்களில்..............

    பதிலளிநீக்கு

 

விழியோடல்கள்