புதன், 17 நவம்பர், 2010

போராளிகளான அப்பாவிகளையும் அடிமைகளான பயங்கரவாதிகளையும் பற்றி பேசுதல்

தேசங்கள் பலதும் தேசங்களாயிராத பொழுதுகளில்..

தேசமாக்குவதற்கும் முடியாத போது
உருவாக்குவதற்குமென
அடிமைகள் எழுவர்.
அடிமைகள் என்பவர் எப்பொழுதும்
அடிப்படையுரிமைகளுமில்லாத
அப்பாவிகள் என்பதே உண்மை.

ஆட்சியாளர்கள் அடக்குமுறையாளர்களாவதும்
அதிகாரமுள்ளவர்கள் ஆக்கிரமிப்பாளர்களாவதும்
அப்பாவிகளை அடிமைப்படுத்துவதும்
அடிமைகள் விடுதலை கேட்பதும் நாளடைவில்
அடிமைகள் போராளிகளாவதும்
போராளிகளான அப்பாவிகள்
பயங்கரவாதிகள் என்றழைக்கப்படுவதும்
பின்பு
பயங்கரவாதிகள் என்றழைக்கப்பட்ட
அப்பாவி அடிமைகள் அழிக்கப்படுவதுமென..

இதற்கு
நீண்ட வரலாறும் உதாரணங்களுமுண்டு
உலகமெங்கும்.

பயங்கரவாதிகள் ஆக்கப்பட்டவர்கள்
அவர்களை ஆக்கியவர்களையும்
அவர்களும் இவர்களுமாக தேடியலைந்து
அவர்களும் இவர்களுமல்லாதவர்களையும்
கொல்வர்.

அப்பாவிகளில் சிலர்
ஆக்கிரமிப்பாளர்களுக்கு அடிமைகளாகி
துரோகிகளென்று முச்சந்தியில் முண்டங்களாக கிடப்பதும்
பயங்கரவாதி என்றானவர்களும் என்றாக்கியவர்களும்
செய்யும் செய்யத பயங்கரங்களால்
அப்பாவிகளின் வாழ்வும் பயங்கரமாவதுண்டு.

இடையிடையில்
அப்பவிகளுள்ளிருக்கும் போராளிகள்
தமக்குள் போரிட்டுக் கொள்வர்.
போராளிகள்  பயங்கரவாதிகளாகவும் ஆக்கிரமிப்பளர்களாகவும் எட்டப்பன்களாகவும் ஆகி..பயங்கரவாதம் செய்வர்.

அக்கிரமிப்பாளர்களாக விரும்பும் போராளிகளை அழிப்பதற்காக
போராளிகள் போரிட்டும்
ஆக்கிரமிப்பாளர்கள் போராளிகளெனும்
பயங்கரவாதிகளைக் கொல்லப் போரிட்டும்
அப்பவிகளைக் கொல்வர்.

அப்பாவிகள் போராளிகளை ஆதரிப்பர்.
போராளிகளில் சிலர்
உண்ணக் கொடுத்த தட்டில் கழிந்து வைத்தது போல
காட்டிக்கொடுப்பர்.

அடிமைகளாயிருந்த அப்பாவிகள்
அடிப்படையுரிமைகளுமில்லாமல் அழிவர்.
நிலமிழந்து..வெளிகளில் அலைந்து..நாடு கடப்பர்.
அகதிகளாவர்..அனாதைகளாவர்..அரை முண்டமாவர்..
அடைக்கப்படுவர்.

கடைசியில்
அப்பாவிகளுடனிருந்த போராளிகளான பயங்கரவாதிகளும்
ஆக்கிரமிப்பாளர்களிடம் அடிமைகளாவர்.
அதிகாரமற்ற ஆட்சியாளர்களாவர்.

அப்பாவிகள் மீண்டும் மீண்டும்
அடிமைகளாகவே வாழ்வர்..
குர்தீஷியர்களைப் போலவும் பலஷ்த்தீனர்களைப் போலவும்..
உலகமெங்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

விழியோடல்கள்