வெள்ளி, 26 நவம்பர், 2010

ஆளற்றுத் தனித்த வெளிகள்

விரும்புகின்றவைகளை கொடுப்பதும்
தருவதையெல்லாம் ஏற்பதும்
மிக கடினமாயுளது எப்போதும்.

ஆயுள் வரை
தாய்நிலத்தில் தாய்மடியில் உறங்குதலின் வரம்
எப்போதும் எல்லோர்க்கும் சித்திப்பதில்லை தான்.

நம்பிக்கைகள் தூர்ந்த புள்ளியில்
வெளிக்கிறது எனது நிலம்.
மலட்டு முலைகளை இழுத்து உறிஞ்சி
சாகின்றனர் சிசுக்கள்.

கொலைக்கள பூமியின்
ஆளற்றுத் தனித்த வெளிகளில்
அலைந்து
மொட்டைச் சுவர்களை  முட்டித் திரும்புகிறது
 எனது காற்று.

யுத்தத்தை வென்றவர்கள்
இப்போது இடுகாடுகளைக் காக்கின்றனர்.
மரணத்தை வென்று
மண்ணைக் களவு கொடுத்தவர்கள்
கண்ணீரில் உயிர்க்கின்றனர்
வெளிகள் முழுவதும்.. 

நேற்றும் கூட பெருமழை பெய்தது..
இன்னும் முளைக்கவில்லை
மண்ணுக்காக  விதைக்கப்பட்ட மனிதர்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

விழியோடல்கள்