திங்கள், 27 செப்டம்பர், 2010

வென்றவர்களும் இன்னும் வெல்லாதவர்களும்

கூடிக்கலைவதும்
கும்பலாய் கூச்சலிடுவதுமாகவேயிருக்கும்
எங்கள் கூட்டங்கள்.

இருப்பற்றவர்களும்
உள்நாட்டில் இடம் பெயர்ந்தவர்களும்
அரசியல் அநாதைகள் என்றவர்களும்..
இருப்பைப் பற்றிப் பேசி விவாதிக்கவும்
எங்களுக்கு
நாங்களே ஆதரவளிக்கவும் கூடினோம்.

ஊரை வாங்கவேண்டும் என்றும்
ஊரில்லாத போதும்..
ஊரிலில்லாத
ஊமைகளாயிருக்கும் சாமிகளுக்கும்
உடுக்கையடிக்க வேண்டும்
என்றும்.............
….......................... முடிவெடுத்தோம்.

தத்தம் வேண்டுதலுக்காக
அரசியல் பேய்களுக்கு
ஊம்பித் திரிந்தவரை உதறிப்போட்டோம்.

மக்களோடு வாழ்வோர்க்கும்
சொந்த மண்ணை நேசிப்பவர்களுக்கும்
தலை கொடுப்பதாக முடிவானது.

எங்கள் குழுவின் போசகர்
இறுதியாக
எழும்பிச் சொன்னார்..
“ போராடுவோம்!  போராடித் தோற்போம்”

உரத்துச் சொல்வதற்கு
மனதுக்குள் நாக்கு சுழன்று வந்தது

'தோற்றவர்களில்லை
நாங்கள்
வென்றவர்கள் மத்தியில் இருக்கும்
இன்னும் வெல்லாதவர்கள்.'

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

விழியோடல்கள்