சனி, 14 ஆகஸ்ட், 2010

நிரந்தரமில்லாத இருப்போடு எச்சில் உமிழும் எனது சுதந்திரம்

ஆயுதங்களோடு புறப்பட்டுப் போனோம்.
எங்களுக்கான
இடுகுழிகளை வெட்டிக்கொள்வதற்காகவும்.

நிரந்தரமில்லாமல்
பெயர்ந்த எல்லா இடங்களிலும்
காலடியின் கீழுள்ள நிலம் சொந்தமானது.

சுவாசத்தை எல்லா வெளியும் அனுமதித்தது.
கைவீச்சுக்கு குப்பை கிளறும் நாய் கூட
சிறு நகர்வும் சலனமும் கொண்டது.

சாகத்தெரிந்தது.
கொல்லத் தெரியவில்லை.
எச்சில் விழுங்கி
வாழ்வின் எதிர்த் திசையில்
மரணத்திற்கு ஆதரவளித்தோம்.

விடாய்த்துத் தணிந்து போனது
தகிப்பு.
பயணப் பொதியினுள் வெறுமையாகிக் கிடந்தன
புட்டிகள்.

இனி..

எனது நில அடைப்பின்
படலை பிரித்து நுழைகையில்..
வேலிகடக்கையில்..
வீட்டின் கதவு யன்னல் திறந்து
காற்று நுகர்வதில்..
முற்றத்து வெளியில் மல்லாந்து கிடப்பதில்..

நினைத்த பொழுதில் எச்சில் உமிழ்வதில்..
உணர்வேன்.
எனது சுதந்திரத்தை..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

விழியோடல்கள்