திங்கள், 7 மார்ச், 2011

தேர்தல் பற்றி தெளிதல்


பால்ய நண்பன் தேடி வந்தான்.

அக்காளுக்கு அருகிடத்திலொரு இடமாற்றமும்
அண்ணனுக்கு அலுவலகத்தில் பதவியுயர்வும்
அடுத்த கோட்டாவிலேயே அவனுக்கொரு வேலையும்
செய்துதருவதாக கூறிய வேட்பாளரை நம்பி..
தேர்தலின் முக்கியத்துவம் பற்றியும்
ஓட்டுக்களை செகரிப்பதெவ்விதம் செல்லுபடியாக்குவதெப்படிஎனவும்
ஏதோவொரு இலக்கத்தையும் நபரையும்
வெல்லச்செய்தால்.. வேண்டிய உதவிகள் பெறலாம்.
என எனையும் தெளிவாக்கினான்.

நானவனை அமரவைத்து பேசினேன்.

அவனது தெளிவு என்பது..
வேட்பாளனின் இலக்கத்தை தெளிவாக தெரிந்து வைப்பதிலும்
மற்றவருக்கும் தெரியப்படுத்துவதிலும்
அவருக்காக ஆள் கூட்டுவதிலும்  
அவரது அல்லது அவர்களது பொய்களையும் போலி நடத்தைகளையும்
உயர்த்தி உத்தமமாக்குவதற்கு முனைவதிலுமிருக்கிறது.

சுவரொட்டிகளுக்கு பசை பூசுவதிலும்
பிரசாரக்கூட்டங்களுக்கு கதிரை அடுக்குவதிலும்
கோணம் கோணமாக நகல் படம் எடுப்பதிலும்
தேவைக்கு ஏற்ப வன்பானம் குடிப்பதிலும்
வறுத்த சோறும் புரியானியும் உண்பதிலும்
அவர்கள் பிடித்திருக்கும் வாடகை வண்டிகளில்
ஒலிபெருக்கிகளை ஒலிக்கவிட்டு உலவுவதிலும்
வேட்பாளர் வீட்டையும் கட்சி பணிமனையையும்
கொடிகள் கட்டி பரபரப்பாக வைத்திருப்பதிலும்

நாட்டில் இல்லாதவர்கள் 
நான்கு நாட்களுக்கு முன் செத்தவர்கள்.
வந்து ஓட்டுப்போட வசதியில்லாதவர்களின்
வாக்காளர் அட்டைகளை செகரித்தலிலும்
வாக்களிப்பு நிலையத்தில் ஏஜண்டாக 
நாள் முழுதும் வாக்காளரை எண்ணுவதிலும்
அல்லது 
கள்ள ஓட்டு போடுவதிலும் கலக்கம் செய்வதிலும் இருக்கிறது.


மக்கள் தெளிவாயுள்ளார்கள் போலும்..
அவர்கள் நினைக்கிறார்கள்
வாக்கெடுப்புக்களே அனாவசியமானது
வாக்களித்தல் நேர மெனக்கேடு..
தாங்கள் ஓட்டு போடாவிட்டாலும்
தங்களுக்கான பிரதிநிதிகள் தெரிவாவார்கள்
அல்லது தெரிவாக்குவார்கள் என்று.

மக்கள் தங்கள் அரசியலுக்காக அவாவோடு இருக்கிறார்கள்
இவர்கள் தத்தம் அரசுக்காக அலைகிறார்கள்.
போகட்டும்
எல்லாத்தமிழனுக்கும் கிடைக்காத 
வசதியும் சுதந்திரமும்
சிலருக்காக வாய்க்கிறதே போகட்டும்.
மற்றவருக்காக ஏதும் செய்யாவிட்டாலும்
அவர்களுக்காகவாவது ஏதும் சேகரிக்கட்டும்.

இன்னுமொன்று.. 
பூனைகள் வளர்க்கிறோம் 
அவை எலியை பிடிக்காவிட்டாலும்
பண்டங்கள் நடுவே கத்தி திரிந்தாலே போதும் 
எலிகள் பண்டங்கள் பக்கம் வர தயங்கும்.
அதுபோல
நாம் பூனையோன்று வளர்ப்பதற்காவது முன்வருவோம்.
கடிக்கும் பூனை இல்லாவிட்டாலும்
கத்தி திரியும் ஒன்றையாவது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

விழியோடல்கள்