திங்கள், 21 பிப்ரவரி, 2011

யுத்தமில்லாத யுத்தகாலத்திலிருந்து விடுபடுதலின் பின்னாக




புலிகளும் பிரபாகரனும் பயங்கரமேதும்
மற்றும்
பயங்கரவாதிகளென்றழைக்கப்பட்டவர்களெவரும்
இல்லையென்றாகி
நாடு முழுவதும்
குண்டு வெடிப்புக்கான சாத்தியங்களும்
குண்டுகளை வைப்பதற்கான தேவைகளும்
வெடிக்க செய்யும் போராளிகளும்
வைத்திருந்தாலும் வெடித்தாலும் கண்டெடுத்தாலும்
புலிகள் வைத்ததற்கும்
சந்தேக நபர்களைப் பிடிப்பதற்கும் சாத்தியங்களினியிராது.

சுற்றிவளைக்கவும்
குடும்ப அட்டைகளை சரிபார்க்கவும்
நிழற்படங்களை சேகரிக்கவும் தலையாட்டி வைக்கவும்
விசாரணைக்கு அழைத்துச் செல்லவும்
கைது செய்ய.. காவலில் வைக்க..
இனியும் அவசியமற்றதாம்.

நாடு சுதந்திரமடைந்துவிட்டது
பயங்கரவாதம் தோற்று 
சுமுகநிலையொன்றும் வந்தாயிற்று.
வடக்கிலும் கிழக்கிலும் தமிழரை அழித்து
அநாதைகளாக்கி அகதிகளாக்கி 
குடிலில் வைத்த நிலங்களை 
சுற்றி உலவி பார்த்துவர
சுதந்திர தேசத்திலுள்ள எவருக்கும் இயலுமாயிருக்கிறது.

ரோந்து நடக்கத் தேவையும்
வீதியில் போய் வருவோரை முறைக்கவும்
விசாரிக்கவும் தாமதப்படுத்தவும் தடுத்து நிறுத்தவும்
காரணமேதுமின்றிப்போயிற்று.
கண்ணி வெடிக்காது கைக்குண்டு வீச்சிராது
இனி
காணாமற்போவோரும் கடத்தப்படுவோருமிரார்.
மறைந்திருந்து சுடுவதும் சுடுபடுவதும்
வீதியில் டயர்களுடன் சேர்ந்து கருகுவதும்
நிகழவே நிகழாது.

பிள்ளை பிடிப்பாரில்லை
வெள்ளை வாகனங்களில் ஏற்றுவாரில்லை
குமருகள் மாலையில் தொலைந்து 
புளை சிதைய மற்றோரிடத்தில்
மறுகாலையில் மீள்தலும் இயல்பாயிராது.
இளந்தாய்களை இரவுகளில் 
இனமறியாதோரெல்லாம் வன்புணர்தலும்
இளந்தாரிகள் இரக்கமின்றி
தெருவோரம் சுடப்பட்டழுகிக் கிடப்பதும்
இனியயினிய இந்நாட்டில் இராதென்றே சொல்கிறார்கள்

பத்திரிகைகள் செய்பவர் செய்திகளை சேகரிப்போர்
பக்கக் கட்டுரைகள் பத்தி எழுத்துக்காரர் 
பட்டப் பகலில் சுடப்படுவதுமிராது.
கட்சியுறுப்பினர்கள் மக்களின் மரியாதைக்குரியவர்கள்
உரத்து மறுத்து எதிர்த்து கண்டித்து
குரல் கொடுப்பவர்கள் என..
நள்ளிரவுகளில் குடும்பத்தினர் முன்பாகவே 
அழைத்துச்செல்லப்படுவதும்
அவர்களது நிலை
பின்நாளில் அறியக்கிடைக்காததும்
அங்கு எங்கேனும் ஆற்று வாய்களில்
அலங்கோலப் பிணங்களாவதும் 
ஜனநாயக நாட்டில் இனியறிய முடியாது.

அடையாள அட்டைகளில்லாதிருப்பதும்
தொலைத்தலும் வீட்டில் விட்டு வருதலும்
"பயங்கரவாதிகளின் அடையாளங்களில்லை"
என்றுரைக்கும் சட்ட நடைமுறையும்..
இருக்கும் தமிழர் அனைவருமே
பயங்கரவாதிகளென்னும்
காரண காரியங்களும் இல்லாதொழியும்.
வேட்டுக்குத் தப்பி சரணடைந்தால்
சுதந்திர நாட்டில் தொழில் பயில முகாமுண்டு.
ஆண்டு பலவாய் தடுப்பு சிறைகளில் 
சந்தேகப் பெயர்களுடன் சாவதும் இனிமாறும்.

தனி நாடும் கோருவதற்கு யாரும்
தமிழர் தனியினமாக வழுமிடங்களும்
சின்ன வன்னி, குட்டி யாழ்ப்பாணம் எனும்
வடக்குப் பெயர்கள் வழக்கிலும் இல்லாது போக..
அநேக தமிழருக்கு சொந்த வாழ்நிலங்களே 
அனுமதிக்கப்படாதும்
அகதிகள், அநாதைகள், அடிமைகள், ஏழைகள்
இழிச்சவாயர்கள், ஏமாளிகள், அடிவருடிகள்,
துரோகிகள் எனும் மறுபெயர்கள்
பல்லாண்டுக்கு அடையாளமாவதும்
புலிகள்
என்றவொரு பெயருக்கிருந்த மரண பயமும்
புல்லுருவிகளிடமிருந்தும் தேசியக்கள்ளர்களிடமிருத்தும்
அப்பாவிகளுக்கிருந்தவொரு பாதுகாப்பும் கூட..
எப்போதுமே இனியிராது போகட்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

விழியோடல்கள்