சனி, 27 நவம்பர், 2010

இப்படிக்கு, தாய் நிலமின்றிய அண்ணன்.

வீரம் பீறி வெந்தணல் களமாடி
வென்று
வேட்டொன்று மார்பில் தெறிக்க
வீர விதையாகியயென் தம்பி..

தாயகக் கனவுகளோடு சந்தனப்பேழையினனாக
தமிழினமின்று உரிமை வென்றிருக்குமென்று
அங்கொரு தூபியின் அடியில்
தோழரும் நீயுமாய் துயில் கொள்கிறாயா...?

இங்கு
நீறுபூக்க நீயன்று கண்ட வென்ற களங்கள்
நிலை குலைந்து கரி மேடுகளாயிற்று...
தோழரும் நீயுமாய் இளநீர் உண்டு
உடல் உறங்கிப்போன சோலை மரங்கள்
மீண்டும் முன்னரங்கக் காப்பரணில்.

அச்சம் குறையவில்லை..
இனஅடக்குமுறையும் தீரவில்லை.
ஆண்டாண்டாய் போர் செய்தோம்.
அழித்தோம். அழிந்தோம்.
விடுதலை என்பதற்கு
விளக்கம் மட்டும் கிடைக்கவில்லை.

சந்தனப்பேழையுள் நீ
விதைக்கப்பட்டதற்காய்
கல்லறை மேடுகள் தான் மீதமாகும் சான்றுகளா?

தாய் நிலம் மீது நீ 
வீரங்கொண்டெழுந்தோடி
பாதச்சுவடுகள் பதித்ததன் புண்ணியம்
களப்புதர்களுக்கு மட்டுமே கிடைத்ததா சொல்.
 

விழியோடல்கள்